ஜெ. வீடு நினைவு இல்லமாகிறது.. தீபாவும், தீபக்கும் என்ன செய்யப்போகிறார்கள்?
ஜெயலலிதாவின் வீடு நினைவு இல்லாமாக மாற்றப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ள நிலையில் இது குறித்து ஜெயலலிதா அண்ணன் வாரிசுகளான தீபக், தீபா என்ன செய்யப்பாகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை : மறைந்த ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை நினைவு இல்லமாக மாற்ற அரசு முடிவு செய்துள்ள நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் வாரிசுகளான தீபக், தீபா என்ன செய்யப் போகிறார்கள் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
ஜெயலலிதா மரணமடைந்ததையடுத்து அதிமுகவில் பிளவுகள் ஏற்பட்டது போல அவரது சொத்துகளை யார் நிர்வகிக்கப் போகிறார்கள் என்ற கேள்வியும் எழுந்தது. ஜெயலலிதா பெயரில் உள்ள நேரடி சொத்துகளுக்கு உரிமை கொண்டாடப் போவதாக ஜெயலலிதாவின் அண்ணன் மகனான தீபக் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.
போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வேதா நிலையம் குடும்ப சொத்து என்பதால் அதற்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபாவும் கூறி வருகிறார். மேலும் போயஸ் கார்டன் இல்லம் தங்களுக்குத் தான் சொந்தம் என்று பாட்டி சந்தியா உயில் எழுதி வைத்துள்ளதாகவும் இருவரும் கூறி வருகின்றனர்.
ஜெயலலிதா நடிகையாக இருந்த போது சம்பாதித்த பணத்தில் வாங்கியது போயஸ் கார்டனின் ஒரு பகுதி. எனவே அவற்றை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது என்றும், இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தை நாடுவோம் என்றும் தீபக் கூறியிருந்தார்.
மேலும் தீபாவும் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற விருப்பமில்லை என்று ஏற்கனவே அளித்துள்ள பேட்டிகளில் கூறியுள்ளார். இந்நிலையில் போயஸ் கார்டன் இல்லம் அரசு நினைவிடமாக மாற்றப்படும் என்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பையடுத்து அவர்களின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தீபக், தீபா சொல்வது போல அவர்களிடம் சந்தியா எழுதிக் கொடுத்த உயில் உள்ளதா. அவர்கள் அதனைக் கொண்டு வழக்கு தொடுப்பார்களா, அல்லது அரசு இவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மக்களின் விருப்பதை நிறைவேற்றும் வகையில் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கான சட்ட ரீதியிலான முயற்சிகளை மேற்கொள்ளுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.