சுண்டைக்காய் என நினைத்து விஷ காய் சாம்பார்.. அறியாமல் சாப்பிட்ட 2 பேர் பலி
கோவை: கோவை மாவட்டத்தில் சுண்டைக்காய் என நினைத்து விஷக்காயில் சமையல் செய்து சாப்பிட்ட 2 பேர் உயிரிழந்தனர்.
கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாலை அமைக்கும் பணியில் நடைபெற்று வருகிறது. அங்கு வேலை செய்வதற்காக திருச்சி மாவட்டம், மணப்பாறை பாத்திமாபுதுார் பகுதியை சேர்ந்த, பலர் ஒரு குழுவாக சென்றுள்ளனர். 30-க்கும் மேற்பட்டோர் நரசீபுரத்தில் இருந்து பூண்டி செல்லும் சாலையில் தார்சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக அவர்கள் நரசீபுரம் அருகே உள்ள மடக்காட்டில் தற்காலிக குடிசை அமைத்து வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 8-ந் தேதி வேலையை முடிந்துவிட்டு வந்த சிலர், அங்குள்ள காட்டுப்பகுதியில் இருந்து சுண்டைக்காய் போன்ற ஒருவித காயை பறித்து வந்து சமைத்து சாப்பிட்டுள்ளனர். அதை சாப்பிட்ட சிறிது நேரத்தில் சந்தானம் (60), பழனிசாமி (45), பொன்னான் (57), முத்துசாமி (70), பெரியசாமி (55), வேல்முருகன் (45), யாகப்பன் (40) ஆகிய ஏழு பேருக்கு திடீர் வாந்தி-பேதி ஏற்பட்டு திடீரென மயக்கமடைந்தனர்.
இதையடுத்து அங்கிருந்த சக தொழிலாளர்கள் அவர்களை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சந்தானம், பழனிச்சாமி ஆகிய 2 பேர் நேற்றுமுன்தினம் உயிரிழந்தனர். மற்ற அனைவருக்கும் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications