போக்கிமான் கோ... அண்ணாநகர் டவர் பார்க்கில் வெறியுடன் ஓடிய இளைஞர்கள் கூட்டம்
சென்னை: போக்கிமான் கோ விளையாட்டு சென்னை மக்களையும் விட்டு வைக்கவில்லை. இதோ சென்னை அண்ணாநகர் பார்க்கில் போக்கிமானைத் தேடி ஒரு பெரிய கூட்டமே ஓடிய சம்பவம் ஆச்சரியத்தையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஜூலை 06, 2016 ஆம் தேதி அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளில் போக்கிமான் கோ ஆக்மென்ட்டட் ரியால்டி கேம் வெளியிடப்பட்டது. அதன்பின் இரண்டாம் கட்டமாக மேலும் சில நாடுகளிலும் போக்கிமான் கோ வெளியிடப்பட்டது. அதன் பின் உலகெங்கும் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் போக்கிமான் கோ தொடர்ந்து ட்ரென்ட் ஆனது.
இதன் விளைவாகக் கூகுள் தேடலில் புதிய சாதனைப் படைத்தது. ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு சாப்ட்வேர் உள்ள ஸ்மார்ட்போன்களில் போக்கிமான் கோ விளையாட்டை டவுன்லோடு செய்து விளையாடலாம். இந்த விளையாட்டு ஜிபிஎஸ் வசதியுடன் விளையாடுவதால், இந்த விளையாட்டில் இடம் பெறும் கேரக்டர்கள் எங்கு வேண்டுமானாலும் செல்லும். அதை துரத்தி சென்று நாம் பிடிக்க வேண்டும்.
ஜிபிஎஸ் கொண்டு விளையாடப்படும் போக்கிமான் கோ விளையாட்ட உலகம் முழுவதும் ஏராளமானவர்களை அடிமையாக்கிவிட்டது. போக்கிமான் கோ மோகம் அதிகரிக்க அமெரிக்காவில் இந்தக் கேம் விளையாடுவதால் பல்வேறு குற்றச் சம்பவங்கள் அதிகரித்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
போக்கிமான் கோ
அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படாத நாடுகளிலும் போக்கிமான் கோ அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்டது. இந்தியாவிலும் போக்கிமான் கோ விளையாடுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. போக்கிமான் கோ விளையாடும் போது இதுவரை கோவில்களுக்குச் செல்லாதவர்களும் முதல் முறையாகக் கோவில்களுக்குச் சென்று வருவதாக கூறியுள்ளனர்.
விளையாட்டுக்கு அடிமை
போக்கிமான் கேம் பயன்பாடு குறித்த ஆய்வை அமெரிக்காவைச் சேர்ந்த '7 பார்க் டேட்டா' என்ற நிறுவனம் நடத்தியுள்ளது. பேஸ்புக் பார்ப்பதற்கு 35 நிமிடங்கள் செலவிடுபவர்கள் போக்கிமான் கோ விளையாடுவதற்காக 75 நிமிடங்கள் செலவிடுகிறார்கள்.
செலவிடும் நேரம் அதிகரிப்பு
பேஸ்புக்கில் கழிக்கும் நேரத்தை விட இரண்டு மடங்கு நேரத்தை போக்கிமான் கோ விளையாடுவதற்காக செலவிடுகிறார்கள். போக்கிமான் கோ விளையாட செலவிடும் நேரம் மற்ற பிரபலமான அப்ளிகேஷன்களான வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம், மெசஞ்சர் உள்ளிட்டவற்றை விடவும் அதிகமாக உள்ளது என்று அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
சுடுகாட்டில் சிக்கிய பெண்
போக்கிமான் கோ கேம் பல விபரீத சம்பவங்களுக்கும் காரணமாகி வருகிறது. அமெரிக்காவில் போக்கிமான் கோ விளையாடிக் கொண்டிருந்த பெண் சுடுகாட்டில் ஒரு மரத்தில் சிக்கி, பின்னர் தீயணைப்பு வீரர்களால் மீட்கப்பட்டிருக்கிறார்.
எல்லை தாண்டிய நபர்கள்
கனடாவை சேர்ந்த இருவர் போக்கிமான் கோ கேம் விளையாடிக்கொண்டே கனடா நாட்டின் எல்லையைத்தாண்டி அமெரிக்காவிற்குள் நுழைந்திருக்கின்றனர். அவர்களை எல்லையில் ரோந்து பணியிலிருந்த காவலர்கள் கைது, எச்சரிக்கைக்குப் பின் விடுதலை செய்திருக்கின்றனர். இப்படி, போக்கிமான் விளையாட்டு விபரீத விளைவுகளையும் உருவாக்கி வருகிறது.
சென்னையில் போக்கிமான்
இந்த விளையாட்டு சென்னை மக்களையும் விட்டு வைக்கவில்லை. இதோ போக்கிமான் விளையாடிக் கொண்டிருந்தவர்கள் சென்னை அண்ணா நகரில் உள்ள பார்க்கில் கூடி விட்டனர். அங்கும், இங்கும் ஓடி, ஓடி போக்கிமானை தேடினர். ஆனால், இறுதிவரை போக்கிமான் கிடைக்கவில்லை என்பதுதான் சோகம்.
ஃபேஸ்புக்கில் பதிவு
இந்த விளையாட்டில் இடம் பெறும் பிலாஸ்டோயிஸ் என்ற கேரக்டரைத் தேடித்தான் அவர்கள் சென்று உள்ளனர். இதை சென்னைவாசி விக்னேஷ் பிள்ளை என்பவர் வீடியோவாக எடுத்து தனது ஃபேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ பலராலும் பகிரப்படுகிறது.
வெறித்தனமாக ஓடிய இளைஞர்கள்
வெறித்தனமாக இளைஞர்கள் ஓடியதைப் பார்த்து அங்கு இருந்தவர்கள் என்னமோ என்று பயந்துவிட்டனர். பின்னர் இந்த விளையாட்டு குறித்து அறிந்த பின்னர் ஆச்சரியத்துடன் திரும்பிச் சென்றனர்.
போக்குவரத்து நெரிசல்
போக்கிமானை தேடி கடந்த வாரம் நியூயார்க்கில் உள்ள பார்க்கில் ஏராளமான இளைஞர்கள் குவிந்ததால் டிராபிக் ஜாம் ஆனது. சென்னையில் இந்த போக்கிமானால் இன்னும் என்னென்ன நடக்குமோ?. விபத்துகள் அதிகம் நடைபெறும் என்று அஞ்சப்படுவதால் இந்த விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.