திடீர் வாகன சோதனை.. ஹெல்மெட் அணியாத இரு சக்கர வாகன ஓட்டிகள் திணறல்
திடீர் வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டதில் இரு சக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள்.
நாகர்கோவில்: கன்னியாகுமரி அருகே போலீசார் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக ஹெல்மெட் அணியாதவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தர்மராஜன் ஹெல்மெட் அணியாதவர்கள் மீது எந்த வித தயக்கமும் இன்றி வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளார். அதன்படி நேற்று மாலை குமரி மாவட்டத்தில் நாகர்கோவில், தக்கலை, குளச்சல், கன்னியாகுமரி ஆகிய சப்-டிவிஷன்களில் விடிய, விடிய வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டனர்.
அப்போது நாகர்கோவில் பகுதியில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 524 பேர் மீதும், தக்கலை பகுதியில் நடந்த ஹெல்மெட் சோதனையில் 403 பேர் மீதும், குளச்சல் சப்-டிவிஷனில் நடந்த சோதனையில் 536 பேர் மீதும், கன்னியாகுமரியில் நடந்த வாகன சோதனையில் 471 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அபராத தொகையும் விதித்தனர்.
மாவட்டம் முழுவதும் நடந்த வாகன சோதனையில் மொத்தம் 1,934 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சோதனை தொடர்ந்து நடைபெறும் எனவும் போலீசார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications