கடலூர் : பிளஸ்-2 படித்து விட்டு எம்பிபிஎஸ் போல வேலை செய்த போலி டாக்டர் கைது
கடலூர் அருகே பிளஸ்-2 படித்து விட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.
Recommended Video
கடலூர்: கடலூர் மாவட்டம் கருவேப்பிலங்குறிச்சியில் பிளஸ்-2 படித்து விட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த போலி டாக்டரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கருவேப்பிலங்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் ஒருவர் மருத்துவபடிப்பு படிக்காமலேயே நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதாக புகார் எழுந்தது.
இதையடுத்து விருத்தாசலம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் சாமிநாதன் தலைமையிலான குழுவினர், சம்பந்தப்பட்ட கிளினிக்குக்கு சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர், விருத்தாசலம் வள்ளலார் தெருவை சேர்ந்த சங்கர் வயது 45 என்பதும், பிளஸ்-2 வரை படித்து விட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்ததும் தெரியவந்தது.
இது குறித்து மருத்துவக்குழுவினர் கருவேப்பிலங்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கரை கைது செய்தனர். மேலும் கிளினிக்கில் இருந்த மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்து பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டது.
கைதான சங்கர், கடந்த ஆண்டு ஒரு பெண்ணுக்கு சிகிச்சை அளித்தபோது சிகிச்சை பலனின்றி அந்த பெண் இறந்துள்ளார். இது சம்பந்தமான வழக்கு விருத்தாசலம் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
மக்களே... போலி டாக்டர் செய்யும் தவறுகளால் டாக்டர்கள் மீது பொதுமக்கள் வைத்துள்ள நம்பிக்கை இழக்கத்தான் செய்கிறது. போலி டாக்டர்களை நீங்களே எளிதில் கண்டுபிடிக்கலாம்.
மருத்துவம் படித்து மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்த மருத்துவர்கள், நோயாளிகளுக்கு எழுதிக் கொடுக்கும் மருந்து சீட்டு மற்றும் லெட்டர் பேடில் தங்களுடைய பெயர், படிப்பு மற்றும் தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலின் பதிவு எண் இவற்றை குறிப்பிட்டுள்ளனரா என்பதை காணவேண்டும்.
அவ்வாறு இல்லையென்றால் நோயாளி உஷாராகி விடவேண்டும். தங்களைக் காத்துக்கொள்வதோடு அவர்கள் பற்றிய தகவல்களை அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தெரிவிக்க வேண்டும். போலிகளால் உங்கள் உடம்பு மட்டுமல்ல உயிரும் போகக்கூடும் ஜாக்கிரதை.