ஜாதி சான்றிதழ் கேட்டு தடையை மீறி பேரணி: கைது செய்த போலீஸ்
செங்கோட்டை: செங்கோட்டையில் ஜாதி சான்றிதழ் கேட்டு தடையை மீறி பேரணியாக செல்ல முயன்ற காட்டு நாயக்கன் சமூகத்தைச் சேர்ந்த ஏராளமானோர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக கேரளா எல்லைப் பகுதியான செங்கோட்டை கடையநல்லூர் , தென்காசி உள்ளிட்ட தாலுகாக்களில் வசிக்கும் 2000 காட்டுநாயக்கன் சமுதாய மக்களுக்கு கடந்த 25ஆண்டுகாலமாக ஜாதி சான்று வழங்கப்படவில்லை என்பது புகார். ஜாதி சான்றிதழ் கேட்டு மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி அந்த சமுதாயத்தினர் பல்வேறு போராட்டங்களை நடத்தியும் விடிவு பிறக்கவில்லை.

இந்நிலையில் அவர்கள் தாங்களுக்கு ஜாதி சான்று தராத காரணத்தால் வரும் ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினத்தன்று மதம் மாற போவதாக கடந்தவாரம் அறிவித்தனர். இதனைத்தொடர்ந்து இந்த மக்களுக்கு ஆதரவாக மாவட்ட இந்துமுன்னணி அமைப்பினர் களத்தில் குதித்தனர்.
இன்று காலை வாஞ்சிநாதன் சிலை முன்பிருந்து நெல்லைமாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக செல்லவும், 8ஆம் தேதி மாவட்ட ஆட்சியரை சந்திக்கவும் முடிவு செய்து போராட்டத்தைஅறிவித்தனர். அதன்படி இன்று காட்டுநாயக்கன் சமுதாயமக்களுக்கு ஆதரவாக 50க்கும் மேற்ப்பட்ட நெல்லைமாவட்ட இந்துமுன்னணி, மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியினர் திரண்டுவந்தனர்.
300க்கும் மேற்பட்ட காட்டு நாயக்க சமுதாய ஆண்களும், பெண்களும்,100க்கும் மேற்ப்பட்ட மாணவ,மாணவிகள் இந்த போரட்டத்தில் கலந்து கொண்டு காலைமுதல் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

இந்த போராட்டத்திற்கு காட்டு நாயக்கன் சமுதாய மாவட்டத்தலைவர் கோபால் தலைமை தாங்கினார். இந்துமுன்னணி நகரத்தலைவர் வர்மாதங்கராஜ், அருணாசலம், கணபதி, முருகன், ஆழ்வார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் அனைவரும் ஊர்வலமாக நெல்லையைநோக்கி மாவட்ட இந்து முன்னணி பொறுப்பாளர் குற்றலநாதன் தலைமையில் செல்ல முயன்றனர்.
அவர்களை தென்காசி காவல்துறை துணைக் கண்காணிப்பாளர்
அரவிந்தன் தலைமையில் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications