டாக்டர் அரவிந்த்ரெட்டி கொலை வழக்கு: குற்றவாளிகளைக் கைது செய்ய போலீஸ் தீவிரம்
வேலூர்: கடந்தாண்டு கொலை செய்யப் பட்ட பா.ஜ.க மாநில மருத்துவ அணிச் செயலர் டாக்டர் அரவிந்த் ரெட்டி படுகொலை வழக்கில் போலீஸ் பக்ருதீன் உட்பட 3 தீவிரவாதிகளைக் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது.
வேலூரில் கடந்த ஆண்டு ஆயுதபூஜை அன்று பா.ஜ.க. மாநில மருத்துவ அணிச்செயலர் டாக்டர் அரவிந்த்ரெட்டி மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் போலீசார் சிலரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், கைது செய்யப் பட்ட தீவிரவாதிகளான போலீஸ் பக்ருதின், பிலால் மாலிக் மற்றும் பன்னா இஸ்மாயில் ஆகியோரிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் நடத்திய விசாரணையில், தீவிரவாதிகள் இந்து முன்னணி வெள்ளையப்பன் கொலை தவிர வேறு சில கொலைக் குற்றத்திலும் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டனர்.
அவற்றில், டாக்டர் அரவிந்த் ரெட்டி படுகொலையும் ஒன்று. அதனைத் தொடர்ந்து, தற்போது தீவிரவாதிகள் போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக் மற்றும் பன்னா இஸ்மாயில் ஆகியோரை அரவிந்த் ரெட்டி கொலை வழக்கில் கைது செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
வரும் திங்களன்று இவர்கள் 3 பேரும் இவ்வழக்கில் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, ஏற்கனவே அரவிந்த்ரெட்டி கொலை வழக்கில் குற்றவாளிகளாகக் கருதப் பட்டு கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்துள்ள 3 பேர் மற்றும் சிறையில் உள்ள 4 பேரை வழக்கில் இருந்து விடுவிப்பதற்கான மனுவையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வேலூர் கோர்ட்டில் அளித்துள்ளனர்.
போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக் மற்றும் பன்னா இஸ்மாயில் ஆகியோர் தற்போது ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு விசாரணைக்காக சேலம் சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் கட்டுப்பாட்டில் உள்ளனர். ஆடிட்டர் ரமேஷ் வழக்கு விசாரணை முடிவடைந்தவுடன் தீவிரவாதிகள் மூவரிடமும், அரவிந்த்ரெட்டி கொலை வழக்கு விசாரணையையும், அதனைத் தொடர்ந்து சாட்சிகள் முன்பு அடையாள அணிவகுப்பு நடத்தவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications