தஞ்சையில் தலித் பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொடூர கொலை- சமூக ஆர்வலர்கள் கொதிப்பு
தஞ்சை: தலித் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து, கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டனர். ஊடகங்களில் இந்த தகவலை சிறிய அளவில் கூட செய்தியாக கூட வெளியிட தயக்கம் காட்டுவது ஏன் என்று சமூக ஆர்வலர்கள் கொந்தளிக்கின்றனர்.
மாணவியின் கொடூர மரணத்திற்கு நியாயம் கேட்டு அவரது உறவினர்கள், இந்திய மாதர் சங்கத்தினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், தீண்டாமை ஒழிப்பு முன்னணி இயக்கத்தினர் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சாவூர் அருகே உள்ள சாலியமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் கலைச்செல்வி,20. இவர் அதே ஊரில் உள்ள தன்னுடைய பெரியம்மா வீட்டில் தங்கியிருந்தார். இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டின் பின்புறம் சென்ற கலைச்செல்வி, பின்னர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் அவரது வீட்டிற்கு அருகே உள்ள முட்புதரில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தது மறுநாள் தெரியவந்தது.
இதையடுத்து, உடலை கைப்பற்றிய அம்மாப்பேட்டை போலீஸார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கலைச்செல்வின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. வாயில் கிழிந்த உள்ளாடையைத் திணித்துவிட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாகவும், சாகும் வரையில் அவரை கொடூரமாகத் தாக்கியுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனிடையே சாலியமங்கலத்தைச் சேர்ந்த ரங்கநாதன், 32, குமார், 30 ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
அப்போது கலைச்செல்வியின் அப்பா ராஜேந்திரன், என் புள்ளையக் கொன்ன மாதிரியே அவனுங்களும் சாகனும். எங்களுக்கு வேற எதுவும் வேணாம். அரசாங்கத்தோட எந்த உதவியும் வேண்டாம் என்று கதறினார்.
ஐ.டி நிறுவனங்களில் வேலை பார்க்கும் பெண் கொல்லப்பட்டால், நாடு தழுவிய அளவில் பரபரப்பான விவாதமாகிறது. ஆனால் ஒரு கிராமத்தில் தலித் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டால், யாருமே கண்டுகொள்வது இல்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
நுங்கம்பாக்கத்தில் கொல்லப்பட்ட சுவாதியைவிட, பல மடங்கு கொடூரமாகக் கொல்லப்பட்டிருக்கிறார் கலைச்செல்வி. ஐ.டி நிறுவனங்களில் வேலை பார்க்கும் பெண் கொல்லப்பட்டால் தேசிய அளவில் பரபரப்பான விவாதமாகிறது. அதுவே, ஏதோ ஒரு கிராமத்தில் தலித் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டால், யாரும் கண்டுகொள்வது இல்லை. மிகுந்த வேதனையாக இருக்கிறது என்று எவிடென்ஸ் கதிர் குற்றம்சாட்டியுள்ளார்.
அந்தப் பெண்ணின் உடலில் கொடூரமான காயங்கள் இருக்கின்றன. வாயில் கிழிந்த உள்ளாடையைத் திணித்துவிட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர். கொடூரமாகக் கொலை செய்த குற்றவாளிகள் மீது குண்டர் சட்டத்தில் வழக்குப் பதிய வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறோம்.
சாலிய மங்கலத்தில் வேற்று சாதி ஆண்களை எதிர்த்துப் பேச முடியாத நிலையில், அந்த ஊர் தலித் மக்கள் உள்ளனர்.
ஆண்டுக்கு 15 பெண்கள் வரையில் பாலியல் சித்ரவதைக்கு ஆளாகிறார்கள். இந்தக் கொடுமையை எதிர்த்துப் பேச முடியாத நிலைமையில இருக்கிறோம். என்று அந்த ஊர் மக்கள் கண்ணீர் விட்டு கதறுகின்றனர்.
இதேபோல எழுத்தாளர் ஜெயராணி என்பவர் தனது பதிவில், நிர்பயா சுவாதி போன்ற ஆதிக்க சாதி பெண்களின் கொலைகள் சமூக இயங்கியலுக்கு எதிரான அச்சுறுத்தலாகக் கருதப்படும் அதே வேளையில் கலைச்செல்வி போன்ற தலித் பெண்கள் மீதான தாக்குதல்கள் சமூக இயல்பாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. அதுவொரு விவாதப் பொருளாக ஆவதே இல்லை. ஊடகங்களும் அறிவுச் சமூகமும் அரசு நிர்வாகமும் மூச்சடைத்து செத்துவிடுகின்றன. இந்தியாவில் என்ன குற்றம் நிகழ்ந்தாலும் சாதியே அதற்கான நீதியை தீர்மானிக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications