தலைவர்களின் சிலைக்கு 'சீல்'… தூத்துக்குடியில் பதட்டம்
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே அனுமதியி்ன்றி வைக்கப்பட்ட தலைவர்களின் சிலைகளை போலீசார் சீல் வைத்து அகற்ற முயன்றதால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் உள்ள உசிலங்குளத்தில் அதிகாலை ஊர் மக்கள் சார்பில் முத்துராமலிங்க தேவர் மற்றும் புலித்தேவன் சிலைகள் கொண்டு வரப்பட்டு ஏற்கனவே அங்கு கட்டப்பட்டுள்ள கட்டிடத்தில் வைக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து வந்து அனுமதியில்லாமல் சிலைகளை வைத்துள்ளதாக கூறி அவற்றை அகற்ற முயன்றனர். இதுபற்றி அறிந்த ஊர்மக்கள் அங்கு திரண்டு வந்து சிலைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பதட்டம் ஏற்பட்டது.
கோவில்பட்டி ஏஎஸ்பி முரளிராம்பா, தாசில்தார் முத்துராமலிங்கம், துணை தாசில்தார் பாஸ்கரன், வருவாய் ஆய்வாளர் மாடசாமி ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் சிலைகளை அங்கிருந்து அகற்றாமல் அனுமதி பெறும் வரை துணிகளால் மூடி வைக்க முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து அதிகாரிகள் துணியால் தலைவர்களின் சிலைகளை மூடினர். பின்னர் சிலைகள் இருந்த கட்டிதத்திற்கும் சீல் வைக்கப்பட்டது. இதையடுத்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைநது சென்றனர்.
தூத்துக்குடி மாவட்ட ஏடிஎஸ்பி கந்தசாமி சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இந்த சம்பவத்தால் அங்கு பதட்டம் நிலவுவதால் இரண்டு இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications