போலீஸைக் குவித்து மீத்தேன் எடுக்கும் ஓன்ஜிசி.. கும்பகோணம் அருகே பரபரப்பு.. மக்கள் கொதிப்பு!
கும்பகோணம் அருகே கதிராமங்கலம் கிராமத்தில் ஓஎன்ஜிசி பணிகளுக்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கும்பகோணம்: கதிராமங்களம் பகுதியில் ஓஎன்ஜிசி பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் அங்கு 1000க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரை அடுத்த கதிராமங்கலம் கிராமத்தில் கடந்த 2000 ஆம் ஆண்டில், ஓஎன்ஜிசி நிறுவனம் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு எடுக்க ஆழ்குழாய் கிணறு அமைத்தது. அங்கிருந்து எடுக்கப்படுகின்ற எரிகாற்று, குழாய் வழியாக குத்தாலம் மையத்திற்கு அனுப்பப்படுகின்றது.
இந்நிலையில் அந்த குழாய்களை அகற்றி மராமத்து பணிகளை ஒஎன்ஜிசி நிறுவனம் மேற்கொண்டுள்ளது. அதேநேரத்தில் ஓஎன்ஜிசி சார்பில் கதிராமங்கலத்தில் மீத்தேன் மற்றும் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான திட்டத்திற்கான ஆய்வு தொடங்க இருப்பதாக தகவல் பரவியது.

ஓஎன்ஜிசி மறுப்பு
இதையடுத்து கடந்த மே19 ஆம் தேதி, ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு வந்து, புதிதாகக் குழாய் அமைக்கும் பணிகளைத் தடுத்து நிறுத்தினர். ஆனால் இதனை மறுத்த ஓஎன்ஜிசி நிறுவனம், மீத்தேன் மற்றும் ஷேல் கேஸ் எடுக்கும் திட்டமில்லை என கூறியது.

கிராம மக்கள் போராட்டம்
ஆனால், அங்கு தொடர்ந்து பணிகள் நடைபெறுவதும், ஆழ்குழாய்கள் பதிக்கப்படுவதும் அப்பகுதி மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. இதனால் கதிராமங்கலம் கிராமத்தில் ஜூன் 1 ஆம் தேதியும், 2 ஆம் தேதியும் பொதுமக்கள் ஓஎன்ஜிசியின் பணிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கைது - போலீஸ் குவிப்பு
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். அவர்கள் கிராமத்தில் அ4 பேர் சேர்ந்து நடக்கவும், வாகனங்களில் பொருட்களை கொண்டுசெல்லவும் தடைவிதித்துள்ளனர்.

கிராம மக்கள் கோரிக்கை
இது அறிவிக்கப்படாத 144 தடை ஆணை போல் இருப்பதாக குற்றம்சாட்டிய கிராம மக்கள் போலீசாரை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். ஓஎன்ஜிசி மற்றும் போலீசாரை வெளியேற்றும் போராட்டம் தொடரும் என்றும் கதிராமங்கலம் மற்றும் சுற்றுவட்டார மக்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications