பொய் புகார் கொடுத்து போலீஸில் மாட்டிக்கொண்ட தீபா? நாற்காலி உடைத்து நாடகமாடியது அம்பலம்
தனது அலுவலகம் தாக்கப்பட்டதாக ஜெ.தீபா கொடுத்த புகார் பொய்யானது என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Recommended Video
சென்னை : தனது வீடு மற்றும் கட்சி அலுவலகத்தை மர்மநபர்கள் தாக்கியதாக தெரிவித்த ஜெ.தீபா அளித்த புகார் பொய்யானது என்பது போலீஸார் விசாரணையில் தெரியவந்து உள்ளது. இதுகுறித்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த இரு தினங்களுக்கு முன், தி.நகர் சிவஞானம் தெருவில் உள்ள தனது எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவையின் தலைமை அலுவலகத்தை சில மர்மநபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தி சேதம் ஏற்படுத்தியதாக அதன் பொதுச்செயலாளரும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகளுமான ஜெ.தீபா மாம்பலம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
மேலும், இந்த வழக்கில் காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட தீபா பேரவை நிர்வாகி ராமச்சந்திரன் தான் தாக்குதல் நடத்தியதாகவும் அவர் தெரிவித்து இருந்தார். இதைத்தொடர்ந்து தி.நகர் துணை ஆணையர் அரவிந்தன் அந்த வழக்கின் மீது விசாரணை மேற்கொண்டார்.
சிசிடிவி பதிவு
அப்போது ராமச்சந்திரனிடம் நடத்திய விசாரணையில், தனக்கு தீபா தர வேண்டிய பணத்தை கேட்டதை அடுத்து தன்னை போலீஸில் மாட்டிவிட திட்டமிட்டு சதி செய்திருப்பதாக கூறி அதற்கான ஆதாரங்களையும் போலீஸாரிடம் சமர்பித்தார். இதனையடுத்து அந்தப்பகுதியில் இருக்கும் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆராய போலீஸார் முடிவு செய்தனர்.
சந்தேகம்
அப்போது தீபா வீட்டில் இருந்த சிசிடிவி கேமராக்கள் சம்பவ நாளான்று மாலை ஏழு மணியில் இருந்து மறுநாள் காலை ஆறு மணிவரை அணைத்து வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்துள்ளது. இதனால் போலீஸாருக்கு சந்தேகம் வலுத்ததையடுத்து அருகில் உள்ள வீட்டின் கேமரா பதிவுகளை ஆராய்ந்தனர்.
பாதுகாவலர்கள்
அதில், இரவு 11 மணியளவில் அலுவலகத்தின் வெளியே தீபா நின்று கைகாட்ட, அவரது பாதுகாப்பாளர்கள் நாற்காலிகளை தூக்கி போட்டு கண்ணாடிகளை உடைப்பது பதிவாகி உள்ளது. இது தொடர்பாக அவரது பாதுகாவலர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். தீபாவிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தீபாவுக்கு குறையும் ஆதரவு
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இவருக்கு கூடிய கூட்டம் தற்போது மெதுவாக மீண்டும் அணி மாறி வருகிறது. ஏற்கனவே ஆர்.கே நகர் இடைத்தேர்தல் வேட்பாளர் மனுத்தாக்கல் படிவத்தை தவறாக நிரப்பியதால், இவரது மனு நிராகரிக்கப்பட்டது.
நாடகமா?
இதுபோன்ற தொடர் சம்பவங்களால் இவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சியடைந்து உள்ள நிலையில், தனது கட்சி நிர்வாகியிடமே பணம் வாங்கிக்கொண்டு அதை திருப்பி தராமல் காவல்துறையிடம் பொய் புகார் அளித்த சம்பவம் தீபா ஆதரவாளர்களை அதிருப்தி அடைய செய்துள்ளது.