நம்பரை மாற்றி கர்நாடகாவுக்கு 36 டன் மணல் கடத்தல்.. லாரி பறிமுதல்
நம்பரை மாற்றி கர்நாடகாவுக்கு மணல் கடத்திச் சென்ற லாரி மற்றும் 36 டன் மணலை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் முதலைப்பட்டி அருகே சந்தேகத்திற்கிடமாக சென்ற லாரியை பிடித்த போலீசார் அதில் இருந்த 36 டன் மணல் மற்றும் லாரியை பறிமுதல் செய்தனர்.
நாமக்கல் மாவட்டம் முதலமைப்பட்டி அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெங்களூரு நோக்கி சென்ற ஒரு லாரியை மடக்கிய போலீசார் அதன் ஓட்டுநரிடம் விசாரித்தனர். அதில் லாரியில் கண்ணாடி கொண்டு செல்வதாக கூறியுள்ளார்.

இதையடுத்து ஆவணங்களை ஆய்வு செய்த போலீசார் ஆவணத்தில் உள்ள பதிவு எண்ணும் லாரியின் எண்ணும் மாறியிருப்பதைக் கண்டு லாரியில் இருந்த லோடை திறந்து பார்த்தனர். அதில் 36 டன் மணல் இருப்பதை கண்டுபிடித்த போலீசார் மணல் மற்றும் லாரியை பறிமுதல் செய்ததோடு ஓட்டுநரையும் கைது செய்து விசாரித்தனர்.
விசாரணையில் திருச்சியில் இருந்து பெங்களூருவுக்கு மணல் கடத்தப்படுவது தெரியவந்தது. கடத்தப்பட இருந்த மணலின் மொத்த மதிப்பு 1.55 லட்சம் ரூபாய் ஆகும். இதுகுறித்து லாரியின் உரிமையாளரான ஆனந்த் என்பவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே இதுகுறித்து தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் செல்ல ராசாமணி விடுத்துள்ள அறிக்கையில் "கர்நாடகா மாநிலத்திற்கு மணல் கடத்தும் கும்பலுக்கு வருவாய் துறையும் போலீசாரும் உறுதுணையாக இருக்கின்றனர். திருச்சி, கரூர் மாவட்டத்தில் இருந்து நாமக்கல், சேலம் மாவட்டத்தில் வாகன சோதனை செய்து மணல் திருட்டை தடுக்க வேண்டும் தவறும் பட்சத்தில், அனைத்து மணல் லாரி உரிமையாளர்களையும் திரட்டி மண்ல கடத்தலில் ஈடுபடும் லாரிகளை சிறைபிடித்து அரசு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும். இது தொடர்பாக, நாளை நாமக்கல்லில் நடக்கும் மாநில செயற்குழுவில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications