தீக்குளிக்க முயற்சித்த இன்ஸ்பெக்டர் காஞ்சனா.. தடகள போட்டிய்யில் 350 தங்கம் வென்றவர்! #selfimmolation
சென்னை: சட்டசபை முன்பாக திருவொற்றியூர் இன்ஸ்பெக்டர் காஞ்சனா தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சட்டசபை பாதுகாப்புக்காக வந்த இடத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி இன்ஸ்பெக்டர் காஞ்சனா தீக்குளிக்க முயற்சித்தார். அவரை சக போலீசார் தடுத்து நிறுத்தி காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர்.
தீக்குளிக்க முயற்சித்த இன்ஸ்பெக்டர் காஞ்சனா தடகளப் போட்டிகளில் 350 தங்கப் பதக்கங்களை வென்ற வீராங்கனை. காஞ்சனாவின் அப்பா சென்னை ஐசிஎஃப் ஊழியர். அவர் குத்துச்சண்டை வீரர்.
அவர் கொடுத்த ஊக்கத்தால்தான் விளையாட்டு வீராங்கனையானார் காஞ்சனா. 13 வயதில் விளையாட தொடங்கிய அவர், 200 மீட்டர், 400 மீட்டர், 1500 மீட்டர் தடகள ஓட்டப்பந்தயங்களில் கலந்து கொண்டு ஓடி வென்றுள்ளார்.
பள்ளி, கல்லூரிகளில் தடகள ஓட்டப்பந்தயங்களில் கலந்துகொண்டு பதக்கங்கள் பெற்றதுடன் மாநில அளவிலான காவல்துறை தடகள போட்டிகளிலும் 100 மீட்டர், 400 மீட்டர் தொடர் ஓட்டங்களிலும் புதிய சாதனை செய்திருக்கிறார்.
ஆசிய அளவிலான மாஸ்டர்ஸ் அத்லெடிக் சாம்பியன் மீட்களிலும் காஞ்சனா பங்கேற்றுள்ளார். பாங்காக்கில் நடந்த பந்தயங்களில் 2 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம் வாங்கினார்.
2008 மலேசியாவில் நடந்த போட்டிகளில் 5 பதக்கங்கள், தைவானில் 4 பதக்கங்கள், மறுமுறை மலேசியா சென்று 4 நான்கு பதக்கங்கள் என வாங்கினார். இதுவரை மொத்தமாக 350 பதக்கங்கள், சான்றிதழ்களுக்கு மேல் வாங்கியுள்ளார்.
"பெண்கள் மிகுந்த சக்தி படைத்தவர்கள். ஒரு குழந்தையைத் தாங்கி பெற்று, வலியை உணர்ந்து வாழ்கிறவர்கள். அப்படி இருக்கும்போது நம்மால் இது முடியாது என்று எதுவும் இல்லை. எப்படியும் வாழ்க்கையில் ஒவ்வொரு காலகட்டத்திலும் வலியோடு வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். அப்படி இருக்கும்போது ஒரு சாதனையைச் செய்து அந்த வலியை நாம் ஏன் பொறுத்துக் கொள்ள கூடாது? சாதிக்க வேண்டும் என்று நினைத்து களத்தில் இறங்கும்போது நிறைய அவமானங்கள், தடைகளைச் சந்திக்க வேண்டிவரும். அத்தனையையும் மீறி நாம் சாதித்தே தீர வேண்டும்" என்று முழங்கிய அந்த காஞ்சனாதான் இன்று மனமுடைந்து தீக்குளிக்க முயற்சித்திருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அவரது தீக்குளிப்பு முயற்சிக்கான காரணங்கள் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.