நந்தினி கொலை வழக்கு - இந்து முன்னணி கும்பலுக்கு ஆதரவாக படுஅலட்சியம் காட்டிய போலீஸ்!
தலித் சிறுமி நந்தினி கடத்தி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒரு மாதத்திற்கு பின்னரே ஊடக வெளிச்சம் பாய்ந்துள்ளது. அந்த அளவிற்கு வெளியே தெரியாமல் அடக்கி வாசித்துள்ளனர் காவல்துறையினர்.
அரியலூர்: அரியலூர் மாவட்டம் சிறுகடம்பூர் கிராமத்தில் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த 16வயது சிறுமி நந்தினியை காதலித்து கர்ப்பமாக்கி விட்டு ஏமாற்றிய இந்து முன்னணி ஒன்றிய செயலாளர் மணிகண்டன், பாலியல் வன்கொடுமை செய்து கொன்று விட்டார். சிறுமியின் உடலை நிர்வாணமாக்கி கிணற்றில் வீசி சென்றுள்ளார். இதற்கு அவராது நண்பர்களும் உடந்தையாக இருந்துள்ளனர்.
சிறுமியின் ஆறுமாத கர்ப்பத்தை கிழித்து எடுத்து அதை எரித்துள்ளனர். கேட்கவே பதை பதைக்க வைக்கும் இந்த சம்பவம் இப்போதுதான் பரபரப்பு செய்தியாக வெளியே தெரியவந்துள்ளது.
•டிசம்பர் 29ம்தேதியன்று காணாமல் போனார் நந்தினி. மறுநாள் 30ஆம் தேதி அவரது தாயார் ராசாக்கிளி, இருப்புலி குறிச்சி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
•இந்து முன்னணி நிர்வாகி மணிகண்டன் மீது சந்தேகப்படுவதாகவும், அவர்தான் தனது மகளை கடத்தியிருப்பார் என்றும் புகாரில் குறிப்பிடடனர்.
•காவல்துறையினர் அந்த புகாரில் பெயர் குறிப்பிடாமல் பெண் மாயமான வழக்காக மட்டுமே பதிவு செய்தனர்.
•நந்தினியின் பெற்றோர் அழுத்தம் கொடுக்கவே ஜனவரி 4ஆம் தேதி மணிகண்டனை அழைத்து விசாரித்து விட்டு அனுப்பினர்.
•ஜனவரி 5ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்தவர்களும், அந்த ஊர் இளைஞர்களும் இந்து முன்னணி மாவட்ட தலைவர் ராஜசேகர் மீது குற்றம் சாட்டி புகார் அளித்தனர். போராட்டமும் நடத்தினர்.
•ஜனவரி 8ஆம் தேதி காவல்நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்து நடந்தது. ஜெயங்கொண்டம் டிஎஸ்பி , பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிகள், நந்தினியின் தாயார் ஆகியோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
•ஜனவரி 14ஆம் தேதி நந்தினியின் உடன் கிணற்றில் மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது. நிர்வாண நிலையில் இருந்த நந்தினியின் உடலை மீட்டனர். புகார் அளிக்கப்பட்ட உடன் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்திருந்தால் உடனடியாக உயிருடன் மீட்டிருக்கலாம் என்று உறவினர்கள் கண்ணீர் மல்க கூறியுள்ளனர்.
•பாதிக்கப்பட்டவர்கள் தலித் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் காவல்துறையினர் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டனர் என்பது சமூக ஆர்வலர்களின் குற்றச்சாட்டு.
•கொலையாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் சடலத்தை வாங்க மாட்டோம் என்று போராடிய பின்னரே மணிகண்டன் உள்ளிட்ட 4 பேரை கைது செய்தது போலீஸ்.
இந்து முன்னணி மாவட்ட தலைவர் ராஜசேகர் மீது நடவடிக்கை தேவை என்று பாதிக்கப்பட்டவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதுவரை காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதுதான் உண்மை.
•நந்தினி கொலை வழக்கில் இப்போதுதான் முதல் குற்றவாளி மணிகண்டன் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. எஞ்சியவர்கள் மீதும் குண்டர் சட்டம் பாயுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.