பலாத்காரம் செய்தவருக்கு காரில் ராஜ ஊர்வலம்; பாவப்பட்ட சிறுமிக்கு நடை- அட்டகாசம் செய்த போலீசார்!
ஈரோடு: ஈரோட்டில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவர் போலீசார் துணையுடன் காரிலும், இவரால் கர்ப்பமாகி பாதிக்கப்பட்ட சிறுமியை போலீசார் நடக்க வைத்தும் கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் கோபி அருகே சிலேட்டர் அவுஸ் பகுதியைச் சேர்ந்தவர் தன்சீர். இவருக்கு திருமணமாகி மனைவி, மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் வீட்டுக்கு அருகே வசித்த 15 வயது சிறுமியை, தன்சீர் அடிக்கடி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால், சிறுமி கர்ப்பமானார்.
கடந்த 7 ஆம் தேதி இரவு தன்சீர் மனைவி ரசீதா பானு தன் கணவர் மீது வீண் பழி சுமத்துவதாக கூறி சிறுமியை சரமாரியாக தாக்கியுள்ளார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் கோபி போலீசில் புகார் செய்தனர்.கட்சி பிரமுகர்கள் சிலர் தலையிட்டு வழக்கு பதிவு செய்யவிடாமல் தடுத்தனர். ஆனால் சிறுமியை நேற்று முன்தினம் இரவு முழுக்க விசாரணை என்ற பெயரில் போலீசார் அலை கழித்தனர்.
நேற்று அதிகாலை 5 மணியளவில் கன்னித்தன்மை பரிசோதனைக்காக அச்சிறுமியை ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தனர். விசாரணைக்குப்பின் கோபி அரசு மருத்துவமனைக்கு சிறுமியை நடக்க வைத்தே அழைத்துச் சென்றனர். ஆனால் குற்றம் சாட்டப்பட்ட தன்சீரை கைது செய்து மறைவான இடத்தில் வைத்திருந்து நேற்று ஆம்னி காரில் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர்.எந்த இடத்திலும் தன்சீரை போட்டோ எடுக்க போலீசார் அனுமதிக்கவில்லை. காவல் துறையினரின் இந்த அலட்சியப் போக்கால் உறவினர்கள் கொதிப்படைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.