ஒரு தலை காதல் விபரீதம்- பெண் போலீசை கொல்ல முயற்சி
நெல்லை: நெல்லையில் காதலை ஏற்க மறுத்த பெண் போலீசை சக ஆண் காவலர் கொல்ல முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாகர்கோவிலை சேர்ந்தவர் அனுஷா. இவர் மணிமுத்தாறு 9வது பட்டாலியனில் போலீசாக வேலை பார்த்து வருகிறார். அதே பட்டாலியனில் வேலை பார்க்கும் ராமசந்திர ராஜ் என்ற போலீஸ்காரர் அனுஷாவை ஒரு தலையாக காதலித்து வந்ததுள்ளார்.
காலை, மாலை நேரங்களிலும், ரோல் கால் செல்லும்போதும் அவரை பின் தொடர்ந்து சென்று பேசி வந்தார். இதனை அனுஷா பலமுறை தவிர்த்தாலும் விடாமல் சென்று தனது காதலை ஏற்குமாறு தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் மாலை ரோல்கால் முடிந்து அனுஷா திரும்பி செல்லும்போது அவரை பின் தொடர்ந்து சென்று வழிமறித்து பேசினார். ஆனால் அனுஷா அவரிடம் பேசாமல் கோபப்பட்டு சென்றுள்ளார்.
இதை தொடர்ந்து ராமசந்திர ராஜ் நீ எனக்கு கிடைக்காவிட்டால் யாருக்கும் கிடைக்க கூடாது என கூறி அனுஷா அணிந்திருந்த அவரது துப்பட்டாவால் அவரின் கழுத்தை நெரித்துள்ளார். இதை எதிர்பாராத அனுஷா கூச்சல் போட்டார். இதை பார்த்த சுற்றியிருந்த காவலர் ஓடி வந்தனர்.
அதற்குள் அனுஷா மயங்கி விழுந்தார். மயங்கி விழுந்த அனுஷாவை நெல்லை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை கொலை செய்ய முயன்ற ராமசந்திரராஜ் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக கல்லிடைக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஒரு தலை காதலால் பெண் போலீசை கொல்ல முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.