சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு எதிரொலி... போயஸ் தோட்ட போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பின் எதிரொலியாக சசிகலா வசித்து வரும் போயஸ் தோட்டத்தில் போடப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெற்றப்பட்டுள்ளது.
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா குற்றவாளி என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததையடுத்து, போயஸ் தோட்டத்தில் போடப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது.
ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் அவர் மறைந்த நிலையில் இரண்டாவது குற்றவாளியான சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் குற்றவாளிகள் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. மேலும் 4 ஆண்டுகள் அவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தலா 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
சசிகலாவின் தலை எழுத்தை மாற்றிய உச்ச நீதிமன்ற தீர்ப்பு, அவரது முதல்வர் கனவை தகர்த்துள்ளது. தற்போது, அவரது பொதுச் செயலாளர் பதவியே இருக்கமா என்று கேள்வியும் எழுந்துள்ளது. இப்படி ஒரு பதற்றமான சூழலில் சசிகலா வசித்து வரும் போயஸ் தோட்டத்தில் போடப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது.
வேதா இல்லம்
போயஸ் தோட்டத்தில் ஜெயலலிதா வசித்து வந்த காலத்தில், அவர் முதல்வராக இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி போலீசார் எப்போது குவிக்கப்பட்டிருப்பார்கள். அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டிருப்பதால் அந்தப் பக்கம் மக்கள் செல்லவே அச்சப்படுவார்கள்.
சசி வசம்
ஜெயலலிதா மறைந்த பின்னர், சசிகலா தொடர்ந்து அந்த வீட்டில் வசித்து வந்தார். தொடக்கத்தில் அவர் எந்தப் பொறுப்பில் இல்லாததாலும், ஜெயலலிதா மறைந்துவிட்டதாலும், போலீசார் முற்றிலுமாக அங்கிருந்து அகற்றப்பட்டனர்.
போலீசார் குவிப்பு
மீண்டும் ஆட்சி அதிகாரம் சசிகலா வசம் வரும் என்று அரசியல் சூழல்கள் மாறிய நிலையில் மீண்டும் போயஸ் கார்டனில் போலீசார் குவிக்கப்பட்டனர். ஜெயலலிதா உயிரிருடன் இருந்த போது போலீசாரால் என்னென்ன பிரச்சனைகள் பொதுமக்களுக்கு ஏற்படுமோ அதெல்லாம் சசிகலா பொதுச் செயலாளராக பதவி ஏற்ற பின்னரும் வரத் தொடங்கியது.
பாதுகாப்பு வாபஸ்
இந்நிலையில், இன்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சசிகலாவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சசிகலா எப்போது வேண்டுமானாலும் பரப்பன அக்ரஹாரா சிறைக்குள் தள்ளப்படலாம் என்ற நிலையில் அவருக்கு அளித்து வந்த போலீஸ் பாதுகாப்பு முற்றிலும் திரும்பப் பெறப்பட்டுள்ளது.