150 சரக்கு பாட்டில்களுடன் 'இளையதளபதி ஆட்டோ' பறிமுதல்!!
செங்கோட்டை: குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு மது சப்ளை செய்வதற்காக ஆட்டோவில் மது பாட்டில்களுடன் சென்ற இருவரை போலீஸார் கைது செய்து அவர்களிடமிருந்து 150 மது பாட்டில்களையும், ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.
குற்றால சீசன் தொடங்கியுள்ளதால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து எராளமானவர்கள் குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் மற்றுமின்றி அருகிலுள்ள கேரளா மாநிலம் ஆரியன்காவு பாலருவி, அச்சன் கோவில் கும்பாஉருட்டி உள்ளிட்ட அருவிகளில் குளிக்க செல்வது வழக்கம்.
அப்படி வரும் இவர்களில் பெரும்பாலானவர்கள் குளிக்கச் செல்லும் முன் குடித்து விட்டு செல்வது வழக்கம் . இப்படி வரும் நபர்களுக்கு பிராந்தி பாட்டில்களை மொத்தமாக வாங்கிவந்து அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக இன்று தென்காசியில் உள்ள அரசு மதுப்பானக்கடையில் மொத்தமாக 150 குவார்ட்டர் பாட்டில்களை வாங்கினார் கற்பகராஜ் என்பவர். பின்னர் ஆட்டோவில் சுப்பிரமணியன் என்ற வாலிபருடன் புளியரை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது செங்கோட்டை இன்ஸ்பெக்டர் முனீஸ்வரன், சப் இன்ஸ்பெக்டர் கனிராஜ், ஏட்டு முத்துப்பாண்டி உள்ளிட்டோர் அரசு விரைவு பேருந்து பணிமனை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
ஆட்டோவை மறித்து சோதனை செய்ததில் ஆட்டோவில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 150 மதுபாட்டில்களை கண்டு பிடித்து அவர்களை கைது செய்து, ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர். மது பாட்டில்களை தென்காசி டிஎஸ்பி அரவிந்தன் பார்வையிட்டு கடத்திய வாலிபர்களிடம் விசாரணை நடத்தினார்.