கோவை கோர்ட்டில் டாஸ்மாக் பற்றி பேச முயன்ற மாவோயிஸ்டுகளின் வாயை பொத்திய போலீஸ்
கோவை: கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 5 மாவோயிஸ்டுகள் மதுக்கடைகளை மூடக் கோரி கோஷம் எழுப்பியவுடன் அவர்களின் வாயை மூடி போலீசார் இழுத்துச் சென்றது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
கோவையில் கடந்த ஆண்டு 5 மாவோயிஸ்டுகள் கைது செய்யப்பட்டனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்போது எல்லாம் பொது பிரச்சனைகள் குறித்து பேசி வருகிறார்கள். நீதிமன்றத்திற்கு வருகையில் ஆந்திராவில் அப்பாவி தமிழர்கள் கொலை செய்யப்பட்டது முதல் சிம்புவின் பீப் பாடல் வரை பல விஷயங்கள் பற்றி கோஷம் எழுப்பியதுடன் பேட்டியும் அளித்துள்ளனர்.

இந்நிலையில் புதன்கிழமை அந்த 5 பேரும் கோவை மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி பொங்கியப்பன் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை வரும் மே மாதம் 25ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
அதன் பிறகு வெளியே வந்த அந்த 5 பேரும் சட்டசபை தேர்தலை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என கோஷமிட்டனர். மேலும் மதுக்கடைகளை மூட வேண்டும் என்றும் கூறிய அவர்களின் வாயில் கையை வைத்து மூடி இழுத்துச் சென்றனர் போலீசார்.
இத்தனை நாட்களாக பொது பிரச்சனைகள் பற்றி பேசிய அவர்களை அடக்காத போலீசார் மதுக்கடைகளை பற்றி மட்டும் பேச விடாதது அங்கிருந்தவர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.
தமிழக கேரள எல்லையில் உள்ள ஆனைகட்டில் இருக்கும் மதுக்கடையை மூடக் கோரி ஆதிவாசி பெண்கள் 2 மாதமாக போராட்டம் நடத்தியும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் அந்த கடையை அகற்றக் கோரி மாவோயிஸ்டுகள் எச்சரிக்கை விடுத்தவுடன் அரசு கடையை மூடியது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications