தொடரும் டெங்கு மரணங்கள்.. கோவையில் ஆயுதப்படைக் போலீஸ்காரர் பலி
கோவையில் ஆயுதப்படைக் காவலர் டெங்கு காய்ச்சலால் மரணமடைந்துள்ளார்.
கோவை : சிகிச்சை பலனின்றி டெங்கு காய்ச்சலுக்கு ஆயுதப்படை காவலர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதுவரை 50க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பலி ஆகி உள்ளனர்.
டெங்குவிற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு டெங்கு பரவாமல் தடுக்கப்பட்டு, மரணங்கள் தவிர்க்கப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இந்நிலையில், கோவையில் ஆயுதப்படைக் காவலர் ஒருவர் டெங்குவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம், உப்பிலிகுண்டு பகுதியை சேர்ந்த ராமர் (39) கோவை மாநகர ஆயுதப்படை வாகன பிரிவில் ஓட்டுனராக பணியாற்றி வந்தார்.
இவருக்கு சில நாட்களுக்கு முன்பு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து அவர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
அவருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ராமர் நேற்று இரவு உயிரிழந்தார்.
இதையடுத்து அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. காவலர் டெங்குவுக்கு உயிரிழந்த சம்பவம் சக காவலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.