போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்ட குழந்தை பலி.. காரணம் என்ன?
தேனி: தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில் போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்ட குழந்தை இறந்தது. இதற்கான காரணம் குறித்து யாரும் விளக்காததால் பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர்.
தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடைபெற்றன. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டியைச் சேர்ந்த சசிக்குமார் என்பவரின் மனைவி சுகன்யா, தனது ஒன்றரை வயது மகனுக்கு சொட்டு மருந்து கொடுக்க அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார மையத்திற்குச் சென்றார்.
கா்லையில் சொட்டு மருந்து கொடுத்து விட்டு வீட்டுக்கு வந்த சிறிது நேரத்தில் குழந்தை மயக்கமடைந்தது. இதையடுத்து அதே அரசு ஆரம்ப சுகாதார மையத்திற்கு விரைந்தனர்.
அங்கு குழந்தையைப் பரிசோதித்த டாக்டர்கள், குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த நிலையில் குழந்தையின் மரணத்திற்கான காரணம் குறித்து தெரிவிக்கப்படாததால், குழந்தையின் உறவினர்கள், பொதுமக்கள் கூடி திண்டுக்கல் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.