ஆன்மீகத்துக்கும் அரசியலுக்கும் அடிப்படை விளக்கம் கூட தெரியாதவரா ரஜினிகாந்த்?
ஆன்மீகத்துக்கும் அரசியலுக்கும் அடிப்படை விளக்கம் தெரியாமல் ஆன்மீக அரசியல் நடத்தப் போவதாக கூறுகிறார் நடிகர் ரஜினிகாந்த்.
Recommended Video

சென்னை: ஆன்மீகத்துக்கும் அரசியலுக்கும் அடிப்படை விளக்கம் கூட தெரியாமல் இரண்டையும் இணைத்து ரஜினி பேசுவது பல வியப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
ஆன்மீக அரசியலை முன்னெடுப்பேன் என்பது ரஜினியின் அறிவிப்பு. இது திராவிட அரசியலுக்கு எதிரானதுதான் என்று இந்துத்துவா அமைப்பினர் மகிழ்ச்சியடைகின்றனர்.
ஆனால் ஆன்மீகமும் அரசியலும் நேர் எதிரானது என்கிற அடிப்படை கூட தெரியாதவர் ரஜினி எனவும் விமர்சிக்கப்படுகிறது. ஆன்மீகம் என்பது கடவுள் என்கிற ஒருவர் நம்மை இயக்குகிறார் என்கிற நம்பிக்கையை கொண்டது.

ஆன்மீகத்தின் வாதம்
ஆனால் அரசியல் என்பது போராட்ட களங்களால் தர்க்கங்களால் அனைத்தையும் செய்ய வைப்பது. ஆண்டவன் செய்வான் என அமைதி காப்பது ஆன்மீகம்; அந்த ஆண்டவனே ஆட்சியில் அமர்ந்துவிட்டால் மக்களுக்கான பணிகளை செய்ய வைப்பதுதான் அரசியல்.

திராவிட அரசியல்
பொதுவான ஆன்மீகம் என்பது மனித குலத்தின் பாதியான பெண்களை ஒதுக்கி வைக்கிறது; தமிழகத்தில் இத்தகைய அடிமைத்தனத்தை சமூக ரீதியாக தகர்த்ததும் திராவிட அரசியல்தான்; பெண்களுக்கான விடுதலையை இடஒதுக்கீடு, சொத்தில் சமபங்கு என்பது போன்ற சட்டங்களால் தக்க வைத்ததும் திராவிட அரசியல்தான்.

அனுமதி மறுக்கும் ஆன்மீகம்
ஆனால் ஆன்மீகம் இன்னமும் பெண்களை கோவில்களுக்குள் அனுமதிக்கவே மறுக்கிறது. ஜாதிய அடிப்படையிலான ஏற்றத் தாழ்வுகளை நியாயப்படுத்துகிறது ஆன்மீகம். அரசியல் என்பது அனைத்து மனிதர்களையும் சமமாகத்தான் நடத்துகிறது. இன்னமும் சொல்லப் போனால் ஆன்மீகம் நியாயப்படுத்துகிற ஏற்றத் தாழ்வுகளை தகர்த்து பாடை கட்டுவதுதான் அரசியல்.

இந்த கேள்விகளுக்கு பதில் எங்கே?
ஆன்மீக அரசியல் என்பது தர்மம்; நியாயத்தை உள்ளடக்கியது என்கிற வியாக்கியானம் தரப்படுகிறது. அப்படியானால் சமூக சீர்திருத்தவாதிகள், மாமேதைகள் செய்த அரசியல் என்பது அதர்மத்தையும் அநியாயத்தையும் உள்ளடக்கியதா? இந்த ஆன்மீக அரசியல் தூய்மையானது எனில் காந்தி முதல் கலாம் வரையில் முன்னெடுத்து பேசிய அரசியல் எல்லாம் அசுத்தமானதா?

எல்லை வகுக்கும் அரசியல்
ஆன்மீகத்தை பற்றி பேசுவதற்கும் விமர்சிப்பதற்குமே எல்லைகளையும் கூட வகுத்து கொடுத்திருப்பது அரசியல். ஆண்டவன் பெயரால் பதவியேற்கிறேன் என்று ஒரு அரசியல்வாதி பிரமாண பத்திரம் வாசிப்பது என்பது தமிழகத்துக்கு தலைப்புச் செய்தி. ஏனெனில் ஆன்மீகத்தை அரசியலுடன் ஒருபோதும் இணைக்கவே முடியாது என்பது தமிழக அரசியல்வாதிகளுக்கு நன்றாகவே தெரிந்த பாலபாடம். இத்தகைய அடிப்படை பாலபாடத்தை கூட தெரியாமல் திடுமென வந்து ஆன்மீக அரசியல் என மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டால் அது அவிழ்க்க முடியாத முடிச்சாகத்தான் இருக்கும்.












Click it and Unblock the Notifications