ஜெ.வை கிண்டலடித்து.... "ஸ்டேண்ட் அப்" காமெடியன்களாக மாறி வரும் அரசியல் தலைவர்கள்..!
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவை கிண்டலடித்து நடித்துக் காட்டி நக்கலடிக்கும் வேலையில் முக்கிய அரசியல் தலைவர்கள் அதிக அளவில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர்.
சமீபத்தில் கூட இப்படித்தான் விஜயகாந்த் கலக்கினார். அதாவது ஜெயலலிதா எப்படி நடப்பார் என்பதை அவர் மேடையில் நடித்துக் காட்டி மேடையில் இருந்தவர்களையும், சுற்றிக் கூடியிருந்தவர்களையும் வயிறு குலுங்கச் சிரிக்கச் செய்து காமெடி செய்தார்.

இந்த வரிசையில் தற்போது மு.க.ஸ்டாலினும் இணைந்துள்ளார். நேற்று திருச்சியில் நடந்த பிரசாரக் கூட்டத்தின்போது அதிமுக அமைச்சர்களையும், அதிமுக வேட்பாளர்களையும் அவர் கிண்டலடித்துப் பேசினார், நடித்தும் காட்டினார்.
ஸ்டாலின் பேசுகையில், ஜெயலலிதா உயரமான இடத்தில் உட்கார்ந்திருக்கிறார். அவருக்குக் கீழ் உள்ள மேடையில் 15 வேட்பாளர்களை அடிமைகள் போல உட்கார வைத்துள்ளனர். ஜெயலலிதா அவர்கள் பெயரைச் சொல்லும்போது அவர்கள் எழுந்து நின்று ஜெயலலிதாவைப் பார்த்து சாஷ்டாங்கமாக கும்பிடுகிறார்கள் (எப்படி அவர்கள் கும்பிடுகிறார்கள் என்பதை கும்பிட்டுக் காட்டினார் ஸ்டாலின்).
ஒ.பன்னீர் செல்வம் தனது வாழ்க்கையில் ஒருமுறை கூட தனது அலுவலகத்தில் சேரில் உட்கார்ந்ததில்லை. சட்டசபையிலும் கூட அப்படித்தான். அவர் முதல்வராக இருந்தவர். அவருக்கென்று தனி இருக்கை கிடையாது. பார்த்தால் உட்கார்ந்திருப்பது போல தோன்றும். அப்படி உட்கார்ந்திருக்கிறார் அவர். அப்படி எப்படி உட்கார முடியும் என்பதை அவர்களிடமிருந்துதான் நாம் கற்றுக் கொள்ள வேண்டும். எப்படியெல்லாம் அவமானப்படுத்தப்படுகிறார்கள் பாருங்கள் அவர்கள் என்றார் ஸ்டாலின்.
ஆனால் ஸ்டாலின் பேச்சுக்கு ஆலந்தூர் தொகுதி அதிமுக வேட்பாளரும், பேச்சாளருமான நடிகை சி.ஆர். சரஸ்வதி பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறுகையில், அம்மா எங்களை குழந்தைகள் போல நடத்துகிறார். நாங்கள் சுதந்திரமாகத்தான் இருக்கிறோம். திமுகவில்தான் ஊழல் பணத்தை வசூலிக்கவும், வசூலித்து அதை கருணாநிதி குடும்பத்திடம் கொடுக்கவும் ஏராளமான அடிமைகள் உள்ளனர் என்றார் சரஸ்வதி.
மொத்தத்தில் தமிழக தேர்தல் களத்தில் அடுத்தவர்களைப் பார்த்து கிண்லடித்து நடிக்கும் ஸ்டாண்ட் அப் காமெடி அதிகரிக்க ஆரம்பித்து விட்டது!












Click it and Unblock the Notifications