ஜெ. விடுதலை... நீதித்துறை மீதான நம்பிக்கைக்கு சறுக்கல் என தலைவர்கள் கருத்து
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கர்நாடக உயர்நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டதற்கு கூட்டணி கட்சித் தலைவா்கள் வரவேற்பு தொிவித்தாலும் எதிர்க்கட்சித் தலைவர்கள் மாறுபட்ட கருத்தைத் தெரிவித்துள்ளனர்.
ஜெயலலிதா விடுதலை குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறுகையில்,

பெங்களுரு சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டு சிறை தண்டனை, 100 கோடி ரூபாய் அபராதம் விதித்தது. தற்போது கர்நாடக உயர்நீதிமன்றம் அவரை விடுதலை செய்துள்ளது.
தீர்ப்பினுடைய முழுமையான நகல் கிடைத்தப் பிறகு அதில் இருக்கக் கூடிய அம்சங்கள் குறித்து கருத்து சொல்லலாம்.
ஆனால் பெங்களுருவில் கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு என்பது இறுதி தீர்ப்பு அல்ல. ஜெயலலிதா விடுவிக்கப்பட்டதை எதிர்த்து கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றார்.
ஜெயலலிதா வழக்கில் தீர்ப்பு நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கையில் பெரும்சறுக்கலை ஏற்படுத்தியிருப்பதாக கொங்குநாடு ஜனநாயக கட்சி நிறுவனத் தலைவர் ஜி.கே..நாகராஜ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
18 ஆண்டு காலம் நடைபெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதி குன்ஹா முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேரை குற்றவாளி என்று தீர்ப்பளித்து தண்டனையையும், அபராதமும் விதித்தார்.
நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹாவின் தீர்ப்பைப் படித்த சட்டநிபுணர்களும், அரசியல் ஆய்வாளர்களும், குன்ஹாவின் தீர்ப்பு ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு, முறையாக பரிசீலிக்கப்பட்ட சரியான தீர்ப்பு என்று கூறியிருந்தனா்.
இதிலிருந்து ஜெயலலிலதா உள்ளிட்டோர் தப்பிக்க இயலாது என்று கூறப்பட்ட நிலையில், குற்றம் சாட்டப்பட்ட நால்வரும் சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து விடுதலை என்ற தீர்ப்பு நடுநிலையான, ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ள மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஊழல் செய்தாலும் சட்டத்தின் ஓட்டையைப் பயன்படுத்தி அதிலிருந்து மீண்டுவிடலாம் என்ற தைரியத்தை ஊழல் அரசியல்வாதிகளுக்கு இந்த தீா்ப்பு ஏற்படுத்தியிருக்கிறது என்பதே உண்மை.
நீதிபதி குமாரசாமி அவர்களின் தீர்ப்பு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ள பொதுமக்களுக்கு நீதி மற்றும் நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கையில் பெரும்சறுக்கலை ஏற்படுத்தியிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications