நீங்க இந்த தொகுதியில இருக்கீங்களா? அப்ப உங்களுக்கு ‘லக்’தானாம்
சென்னை: கோலம் போடுறப்ப கவர் போடுறது... பால் பாக்கெட் போடுற மாதிரி பணம் கொடுப்பது என வாக்காளர்களை கவர பலவித டெக்னிக்குகளை கற்று வைத்துள்ளனர் நம்முடைய வேட்பாளர்கள்.
ஓட்டுப் போட பணம் கொடுத்தாலோ, பணம் வாங்கினாலோ சட்டப்படி குற்றம் என்றும் ஒரு ஆண்டுவரை சிறை தண்டனை வழங்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் எச்சரித்தபடிதான் இருக்கிறது.
ஆனாலும் கறிவிருந்து, காதுகுத்து, கல்யாணம் என கூட்டம் கூடும் இடங்களில் காதும் காதும் வைத்தது போல கும்மாங்குத்து குத்தி விடுகிறார்கள் அரசியல் கட்சியினர். முன்பெல்லாம் டீக்கடை டோக்கன், வடை, பஜ்ஜி போண்டா என அன்பளிப்பாக அளித்த வேட்பாளர்கள் இப்போது அசராமல் 1000 ரூபாய் நோட்டுக்களை அள்ளிவிடுகின்றனர்.
எல்லாம் திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தலுக்குப் பின்னர்தான் என்கின்றனர். இதன்பிறகு வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை ‘திருமங்கலம் பார்முலா' என்றே பெயர் வைத்துவிட்டனர்.
இடைத்தேர்தல் மட்டுமல்லாது,சட்டமன்றத்தேர்தலோ, நாடாளுமன்றத்தேர்தலோ எந்த தேர்தலாக இருந்தாலும் வகையாக கவனித்து வாக்குகளை பெற போட்டி போட்டு பணத்தை செலவழிக்கின்றனர் வேட்பாளர்கள். இதனால் வாக்காளர்களுக்கு குறுகிய கால சுபிட்சம் ஏற்படுகிறது. அடகு நகைகள் மீட்கப்படுகின்றன. புது செல்போன்கள், ஏன் சில நேரங்களில் வாகன யோகம் கூட வருகிறது.

வேலையே பார்க்க வேணாம்
தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து பல ஆண்கள் வேலைக்கே போவதில்லையாம். நேரத்திற்கு சாப்பாடு, கூடவே குவாட்டர், கைசெலவுக்கு பணம் என கைமாறுவதால் தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாம்.

பசையான பத்து தொகுதிகள்
தமிழ்நாட்டில் 39 புதுச்சேரியில் 1 என 40 தொகுதிக்கள் இருந்தாலும் பசையுள்ள 10 தொகுதிகளை சுட்டிக்காட்டுகின்றனர் அரசியல் நோக்கர்கள்.
அவை, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், அரக்கோணம், கரூர், தஞ்சாவூர், பெரம்பலூர், சிவகங்கை, விருதுநகர், தேனி மற்றும் திருநெல்வேலி.

நீலகிரியில் ராஜா
இந்த 10 தொகுதிகளிலும், வாக்காளர்களுக்கு 'ஜாக்பாட்' அடித்து இருந்தாலும், அனைவரும் நீலகிரி தொகுதியை சற்று பொறாமையோடு தான் பார்க்கின்றனர். காரணம், இங்கு, ஸ்பெக்ட்ரம் ராஜா நிற்பதால் பணம் பாதாளம் வரை பாயும் என்பதுதான்.

பெரும்பணக்காரர் போட்டி
திருநெல்வேலி தி.மு.க., வேட்பாளர் தேவதாச சுந்தரம், நேர்காணலின் போதே, 'எத்தனை ஆனாலும் செலவு செய்வேன்' என, சொல்லித்தான் சீட் வாங்கியுள்ளார். புதியவரான அவருக்கு சீட் கொடுக்கப்பட்டதற்கு மாவட்ட நிர்வாகிகள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. காரணம், அவரின் 'அன்பளிப்புக்கு' கட்டுப்பட்டுதானாம்.

தேனியிலும் கவனிப்பு
தேனி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் ஜே.எம்.ஆரூண் ஏற்கனவே வாக்காளர்களையும், மாற்றுக் கட்சியினரையும் தன் 'கவனிப்பால்' உள்ளம் கவர்ந்தவர். இரண்டு முறை அப்படித்தான் வெற்றி பெற்றார். இம்முறையும் அதே பாணியிலேயே இப்போதும் தேர்தலை சந்திப்பதால் இப்போதே சிவப்பு, பச்சை காகிதங்கள் ஊருக்குள் தாராளமாக வலம் வருகின்றனவாம்.

ஜெயித்தே ஆகவேண்டும்
விருதுநகரில் கடந்த முறை சொற்ப வித்தியாத்தில் தோற்றுப் போன தலைவர் ஒருவர் இம்முறையும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் இனத்தை சேர்ந்த பணக்காரர்கள் பலகோடி செலவு செய்ய தயாராக இருக்கின்றனர். அதேசமயம், பிரபல ஆலை ஒன்று அவருக்கு எதிராக 150 கோடி ரூபாய் வரை செலவழிக்க தயாராக உள்ளதாம். அதேபோல தி.மு.க., வேட்பாளர் ரத்தினவேலுவுக்கு, சாத்தூராரின் முழு ஆதரவு இருப்பதால், காற்று நுழையமுடியாத இடங்களை தவிர, மற்ற இடங்களை எல்லாம் ரத்தினவேலு, 'கவர்' செய்துவிட்டாராம்.

நிதிப்புழக்கம் அதிகமாம்
சிவகங்கையில் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுவதால், அங்கு நிறைய கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் தொகுதி மக்கள் உள்ளனர். எதிர் தரப்பான தி.மு.க., வேட்பாளர் சுப.துரைராஜ், மணல் கான்ட்ராக்டர் ஒருவரின் ஆசி பெற்றவர் என்பதால் பணப்புழக்கத்திற்கு குறைவில்லையாம்.

கட்சிக்காரர்களுக்கு கவனிப்பு
கரூர் தொகுதியில் அ.தி.மு.க.வின் தம்பிதுரையும், திமுகவின் சின்னச்சாமியும் பணம் படைத்தவர்கள். அதிமுகவில் கட்சி சார்பிலேயே, அனைத்து வேட்பாளர்களின், பெரும்பாலான செலவுகள் ஏற்றுக்கொள்ளப் பட்டாலும், கட்சிக்காரர்களை தம்பித்துரை சிறப்பாக கவனித்து வருகிறாராம்.

ஒரு ஓட்டின் விலை மூவாயிரம்
பெரம்பலூரில்தான் அ.தி.மு.க., வேட்பாளர் மருதராஜா, ரியல் எஸ்டேட் அதிபர். தி.மு.க., வேட்பாளர் சீமானூர் பிரபு, மணல் குவாரி அதிபர். ஐ.ஜே.கே., வேட்பாளர் பச்சமுத்து, கல்வி நிறுவன அதிபர் என பெரும்பணக்காரர்கள் மோதுகின்றனர். கடும் போட்டி நிலவுவதால் ஒரு ஓட்டின் விலை 3,000 ரூபாயாம்.

நாங்களும் பணக்காரங்கதான்
இதேபோல மத்தியசென்னையில் போட்டியிடும் தயாநிதிமாறன் வாரி இறைப்பதில் வள்ளல் என்கின்றனர் கட்சிக்காரர்கள். இதனால் ஆளுங்கட்சித் தரப்பிலும் பட்ஜெட் அதிகரிக்கப்பட்டு விட்டதாம்.

அள்ளிவிடும் வேட்பாளர்கள்
பெரும் தொழிலதிபர்களான ஜெகத்ரட்சகனும், கே.என்.ராமச்சந்திரனும் ஸ்ரீ பெரும்புதூர் தொகுதியில் போட்டியிடுகின்றனர். கணக்கில்லாம் கொட்டப்படும் பணக்கட்டுகளால், டீக்கடைகளில் கூட 1,000 ரூபாய் நோட்டுகள் சர்வசாதரணமாக புழங்குகிறதாம்.

பணப்புழக்கம் அதிகம்
தஞ்சாவூர் தொகுதியில், கடந்த சில நாட்களாகவே, பணப் புழக்கம் அதிகமாக இருப்பதாக, அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. காரணம் உள்ளடி வேலைகளை சமாளிக்க அதிகமாக பணம் செய்ய வேண்டியிருக்கிறதாம். அதேபோல அரக்கோணம், தொகுதியிலும் பணமழை பெய்ய ஆரம்பித்து விட்டதாம்.

கண்காணிப்புக்கு கல்தா
என்னதான் தேர்தல் அதிகாரிகள் படுகண்காணிப்பில் இருந்தாலும் ஏதாவது ஒருவகையில் வாக்காளர்களை கவனித்து விடவேண்டும் என்று கங்கனம் கட்டிக்கொண்டு செயல்படுகின்றனராம் கட்சிக்காரர்கள்.

5 முனை போட்டியில ஜெயிக்கணுமே
இம்முறை 5முனை போட்டி நிலவுகிறது எப்படியாவது ஜெயித்தே ஆகவேண்டும் என்ற நோக்கத்தோடு திருமங்கலம் பார்முலாவை கையில் எடுத்துள்ளன கட்சிகள். தேர்தலுக்கு கடைசி ஒரு வாரத்திற்கு முன்புதான் பணத்தை களமிறக்க முடிவு செய்து பதுக்கி வருகின்றன. என்ன செய்யப் போகிறது தேர்தல் ஆணையம்?












Click it and Unblock the Notifications