மெரினாவில் ஜெ.வுக்கு நினைவு மண்டபம்.. தமிழக அரசு கட்டுவது தவறு.. வாசகர்கள் கருத்து
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு மெரினாவில் நினைவிடம் அமைப்பதற்கு மக்கள் அதிக அளவில் எதிர்ப்பை பதிவு செய்து இருக்கிறார்கள்.
Recommended Video
சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு மெரினாவில் நினைவிடம் அமைப்பதற்கு மக்கள் அதிக அளவில் எதிர்ப்பை பதிவு செய்து இருக்கிறார்கள். ஜெயலலிதாவிற்கு கட்டப்பட உள்ள நினைவு மண்டபம் குறித்து ஒன்இந்தியா வாசகர்களிடம் கேட்டபோது பலரும் அரசின் முடிவிற்கு எதிராக வாக்களித்துள்ளனர்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் மெரினாவில் எம்ஜிஆர் சமாதி அருகேயுள்ளது. இந்த ஜெ. நினைவிடத்தை தற்போது நினைவு மண்டபமாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்து இருக்கிறது. இதற்காக அரசு செலவில் ரூ.50.80 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நினைவு மண்டபம் அமைக்கும் நிகழ்ச்சிக்கான யாக பூஜை நேற்று நடைபெற்றது. இதன் பூஜையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இந்த மண்டபம் ஃபீனிக்ஸ் பறவை வடிவத்தில் அமைக்கப்பட உள்ளது.
சர்ச்சை
தமிழக அரசின் இந்த முடிவு குறித்து ஒன்இந்தியா அதன் வாசகர்களிடம் வாக்கெடுப்பு நடத்தியது. இதற்கு கலவையான விமர்சனங்கள் வந்துள்ளது. நீதிமன்றத்தால் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. இந்த நிலையில் அவருக்கு தமிழக சட்டசபையில் புகைப்படம் திறந்த போதே பெரிய பிரச்சனை உருவானது. போதாதென்று அரசு செலவில் அவருக்கு நினைவு மண்டபம் கட்டுவது இன்னும் பிரச்சனையை உருவாக்கி உள்ளது.
தவறு பண்ணிட்டாங்க
பெருமளவிலான வாசகர்கள் ''தமிழக அரசின் இந்த முடிவு மிகப்பெரிய தவறு'' என்று கூறியுள்ளனர். மொத்தமாக 60.4% பேர் தமிழக அரசு இப்படி செய்தது தவறு என்ற பதிலை தேர்வு செய்துள்ளனர்.
தவறு கிடையாது
அதேசமயம், கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களில் 22.71% பேர் இந்த விஷயத்தை வரவேற்று இருக்கிறார்கள். ஜெயலலிதாவிற்கு சிலை வைப்பதில் என்ன தவறு என்ற பதிலைத் தேர்வு செய்து வாக்களித்துள்ளனர்.
சுப்ரீம் கோர்ட்
சிலர் இந்த விஷயம் பற்றி வேறு விதத்தில் கோபமாக வாக்களித்துள்ளார்கள். அதன்படி சுப்ரீம் கோர்ட் இதைத் தடுக்க வேண்டும் என்று 16.89% மக்கள் வாக்களித்துள்ளார்கள்.