கார் விபத்தில் இளம்பெண் பலி - பொள்ளாச்சி ஜெயராமன் மகன் கைதாகி ஜாமீனில் விடுதலை
திருப்பூர்: கார் விபத்தில் இளம்பெண் பலியான சம்பவத்தை தொடர்ந்து காரை ஓட்டி வந்த துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் மீது திருப்பூர் பெருமாநல்லூர் போலீசார் மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பிரவீன் பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
தமிழக சட்டசபை துணை சபாநாயகரான பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் பிரவீன் தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர் தனது காரில் பெண் தோழிகள் மற்றும் நண்பர்களுடன் ஈரோட்டில் உள்ள மற்றொரு நண்பரின் பிறந்தநாளில் பங்கேற்க சென்றுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்துக்குள்ளானது. இதில் காரின் பின்புறம் அமர்ந்திருந்த சுரேகா என்ற இளம்பெண் பலியானார். 7 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து தொடர்பாக பிரவீன் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பிரவீன் 120 கி.மீட்டர் வேகத்தில் காரை ஓட்டி வந்ததும் தெரியவந்துள்ளது. காரை ஓட்டி வந்த பிரவீனும் பலத்த காயமடைந்தார். இந்நிலையில் இந்த விபத்து தொடர்பாக பிரவீனை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பிரவீன் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.