தேனி திமுக வேட்பாளர் பொன் முத்துராமலிங்கம்.. 'வாத்தியாரை'யே எதிர்த்த 'தில்' ராமலிங்கம்!
சென்னை: தேனி தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிடும் 74 வயது பொன் முத்துராமலிங்கம், மதுரை மண்ணைச் சேர்ந்தவர். அங்கிருந்து இடம் பெயர்ந்து தேனியில் களம் காண்கிறார்.
ஒரு காலத்தில் எம்.ஜி.ஆரையே எதிர்த்துப் போட்டியிட்டு, எம்.ஜி.ஆருக்கு எதிராக பம்பரம் போல சுற்றிச் சுழன்று தீவிரப் பிரசாரம் செய்து அதிமுகவினரையே நடுங்க வைத்த பெருமைக்குரியவர் பொன் முத்துராமலிங்கம்.
திமுகவின் பழைய இரும்புத் தூண்களில் ஒருவரான பொன் முத்துராமலிங்கம் நீண்ட இடைவெ்ளிக்குப் பின்னர் தேர்தல் களம் காண்கிறார் என்பதால் அவரது ஆதரவாளர்கள் பெரும் உற்சாகமடைந்துள்ளனர்.

சோழவந்தான் முத்து
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள இரும்பாடி என்ற சின்னக் கிராமம்தான் பொன் முத்துராமலிங்கத்தின் பூர்வீக ஊராகும்.

மதுரை நரிமேட்டில்
இருப்பினும் தனது குடும்பத்தாருடன் மதுரை நரிமேடு பகுதியில்தான் பல காலமாக வசித்து வருகிறார் பொன் முத்துராமலிங்கம்.

முக்குலத்தோர்
முக்குலத்தில் ஒரு குலமான அகமுடையார் பிரிவைச் சேர்ந்தவர் பொன் முத்துராமலிங்கம்.

எம்.ஜி.ஆருடன் மோதல்
எம்.ஜி.ஆருக்கும் பொன் முத்துராமலிங்கத்திற்கும் நிறைய விசேஷம் உண்டு. எம்.ஜி. ஆரை எதிர்த்துத் தைரியமாக போட்டியிட்டு கடும் பீதியைக் கொடுத்தவர் பொன் முத்துராமலிங்கம். அவ்வளவு சுறுசுறுப்பான ஒருவர் பொன் முத்து.

திண்டுக்கல்லில் முட்டி மோதி
1972ம் ஆண்டு அதிமுக ஆரம்பித்த புதிதில் திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டவர். ஆனால் அதில் தோல்வி அடைந்தார்.

மதுரையில் 'சுந்தரபாண்டியனுடன்' மோதல்
மதுரையில் 1980ம் ஆண்டு மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிட்டார் எம்.ஜி.ஆர். அப்போது அவரை எதிர்த்து பொன் முத்துவைத்தான் களம் இறக்கினார் கருணாநிதி. பொன் முத்துவும், எம்.ஜி.ஆரைக் கண்டு சற்றும் பயப்படாமல் சூறாவளி போல பிரசாரம் செய்தது அந்தக் காலத்து மதுரை மேற்குத் தொகுதியினருக்கு இன்னும் மறக்க முடியாத ஒரு விஷயம். தேர்தலில் வெற்றி எம்.ஜி.ஆருக்குத்தான்.

84ல் முதல் முறையாக எம்.எல்.ஏ.
அடுத்து 1984ல் நடந்த சட்டசபைத் தேர்தலில் மதுரை மேற்கில் போட்டியிட்டு வென்றார். பின்னர் 1989ல் மீண்டும் போட்டியிட்டு வென்றார். இந்த முறை அவர் கருணாநிதி அமைச்சரவையிலும் இடம் பெற்றார்.

3 மகன்கள் - 2 மகள்கள்
மனைவி மல்லிகா, 3 மகன்கள், 2 மகள்களுடன் வசித்து வருகிறார் பொன் முத்துராமலிங்கம். தற்போது திமுகவில் தீர்மானக் குழுத் தலைவராக இருக்கிறார்.

பொன் முத்துவின் - முக்கியத் தகுதி
பொன் முத்துராமலிங்கத்திற்கு இந்த முறை எம்.பி சீட் கிடைக்க முக்கியக் காரணம், அவரிடம் இருந்த மு.க.ஸ்டாலின் ஆதரவாளர் என்ற அதி முக்கியத் தகுதிதான் என்று சொல்கிறார்கள்.












Click it and Unblock the Notifications