தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவுடன் பொன்.ராதாகிருஷ்ணன் திடீர் சந்திப்பு
சென்னை: மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை நேற்று மாலை திடீரென சந்தித்து பேசியுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.
அதிமுகவின் பொதுச் செயலாளராகவும், தமிழக முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா, கடந்த டிசம்பர் 5-ம் தேதி காலமானார். அன்றிரவே, அதிமுக எம்எல்ஏக்கள் கூடி, சட்டப்பேரவை கட்சித் தலைவராக ஓ.பன்னீர்செல்வத்தை தேர்வு செய்தனர்.
இதற்கிடையே, பொதுச் செயலாளர் மட்டுமின்றி சசிகலா தமிழக முதல்வராகவும் வரவேண்டும் என்ற கோரிக்கையை அதிமுகவினர் வலியுறுத்தி வருகின்றனர். இதையடுத்து அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் டிசம்பர் 29-ம் தேதி நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா அறிவிக்கப்படலாம் என அதிமுக வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. தமிழக அரசியல் சூழ்நிலைகளை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக பதவி வகித்துவரும் வித்யாசாகர் ராவை பாஜகவை சேர்ந்த மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆளுநர் மாளிகையில் நேற்று சந்தித்து பேசினார். இரவு 7 மணியிலிருந்து 8 மணி வரை 1 மணி நேரம் இந்த சந்திப்பு நீடித்ததாக தகவல்கள் கூறுகின்றன.
இந்த சந்திப்பானது மரியாதை நிமித்தமானது என்று ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் வருமானவரித் துறையினரின் அதிரடி சோதனைகள் உள்ளிட்ட நிகழ்வுகள் அரங்கேறி வரும் நிலையில் நடந்துள்ள இந்த சந்திப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.