ஜல்லிக்கட்டு நடைபெற வாய்ப்பில்லை.. பகிரங்க மன்னிப்பு கோரினார் பொன்.ராதாகிருஷ்ணன் !
ஜல்லிக்கட்டு நடத்த முடியாததற்கு மன்னிப்பு கோருகின்றேன் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சென்னை: இந்தாண்டு ஜல்லிக்கட்டு நடத்த முடியாமல் போனதற்கு தமிழக மக்களிடம் மன்னிப்பு கோருகிறேன் என மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்று ஜல்லிக்கட்டு. கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதி மன்றம் தடை விதித்தது. இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. இதனால் கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடைபெறாமல் போனது. காட்சிப்படுத்தும் விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகள் நீக்கப்படாததால் இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனிடையே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சிகள், பொதுமக்கள் என பலதரப்பட்டவர்களும் தொடர்ந்து போராடி வருகின்றனர். இதனிடையே இந்தாண்டு பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு கண்டிப்பாக நடைபெறும் என அவ்வப்போது மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை அளித்து வந்தார்.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன், வாக்குறுதிப்படி ஜல்லிக்கட்டுக்கு அனுமதி பெற்று தராததற்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ளார். தமிழக விவசாயிகள் நலனுக்காக தன்னுடைய ஒரு மாத சம்பளத்தை வழங்குவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தாமல் பொங்கல் பண்டிகை கொண்டாட மாட்டேன் என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications