இந்து இயக்க பிரமுகர்கள் மீதான தாக்குதலில் சர்வதேச பயங்கரவாதத்துக்கு தொடர்பு: பொன். ரா 'திடுக்'
திண்டுக்கல்: தமிழகத்தில் இந்து இயக்க பிரமுகர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களில் சர்வதேச அளவிலான பயங்கரவாதத்துக்குத் தொடர்பு உள்ளதாக மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.
திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பொன். ராதாகிருருஷ்ணன் கூறியதாவது:
1989-ம் ஆண்டு திண்டுக்கல் அருகே நாகராஜ் என்பவர் படுகொலை செய்யப்பட்டது முதல் திண்டுக்கல் மாவட்டத்தில் பதற்றம் தொடர்கதையாகி வருகிறது. போலீசார் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் கடந்த சில நாட்களுக்கு முன்பு திண்டுக்கல்லைச் சேர்ந்த இந்து முன்னணி பிரமுகர் சங்கர் கணேஷ் மீது நடந்த தாக்குதல் தடுக்கப்பட்டிருக்கும்.
சவால் விடுகிறார்கள்...
திண்டுக்கல்லில் பா.ஜ.க. அலுவலகம் மற்றும் மாநில நிர்வாகியின் கார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு நடந்தது. இதனை அடுத்து மிரட்டல் கடிதமும் அனுப்பி உள்ளனர். இது போன்ற சம்பவங்கள் போலீசாருக்கு சவால் விடும் நிகழ்வாகும்.
அழிக்க வேண்டும்
எத்தனை தாக்குதல்கள் நடந்தாலும் ஜனநாயக முறையில் சேவை செய்வதுதான் எங்கள் கடமையாகும். 1977-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். நக்சலைட்டுகளை வேருடன் அழித்தது போல தற்போதைய முதல்வர் ஜெயலலிதாவும் நக்சலைட்டுகளையும், பயங்கரவாதத்தையும் வேருடன் அழிக்க வேண்டும்.
சர்வதேச தொடர்பு
தமிழகத்தில் கடந்த 15 நாட்களாக இந்து அமைப்பினர் மீது தொடர் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இது 2 இயக்கத்துக்கோ, 2 மதங்களுக்கோ நடக்கும் மோதல் அல்ல. உலக அளவில் உள்ள பயங்கரவாதத்துக்கும் இதற்கும் தொடர்பு உள்ளது.
நவாஸ் ஷெரீப்தான் காரணம்..
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப் ஐநாவில் காஷ்மீர் குறித்து பேசிய பின்தான் கடந்த 15 நாட்களாக இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதன் பின்னணியில் உள்ளவர்களை போலீசார் சவாலாக ஏற்று கண்டு பிடிக்க வேண்டும்.
இவ்வாறு பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.