பேருந்து கட்டண உயர்வு விவகாரத்தில் ஓசூரில் ஆதரவு.. கோவையில் எதிர்ப்பு... பொன்னார் அந்தர் பல்டி
கோவை: பேருந்து கட்டண உயர்வு சரியானதே என்று மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பேசியிருந்த நிலையில் தற்போது அப்படியே அந்தர் பல்டி அடித்து பேருந்து கட்டணத்தை குறைக்க வலியுறுத்தியுள்ளது கட்சியினரிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
எரிப்பொருள் விலையேற்றம், ஊதிய உயர்வு, பராமரிப்பு கட்டண உயர்வு உள்ளிட்ட காரணங்களால் பேருந்து கட்டணத்தை ஏற்றுவதாக தமிழக அரசு அறிவித்தது. அதன்படி நேற்று முதல் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வந்தது.

66 சதவீத கட்டண உயர்வால் பொதுமக்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். போக்குவரத்து துறை நஷ்டத்தில் இயங்குகிறது என்றால் எம்எல்ஏக்களின் சம்பளத்தை குறைத்து கொள்ள வேண்டியதுதானே என்று பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்தார்.
மேலும் தமிழக அரசை கண்டித்து ஜனவரி 24-ஆம் தேதி போராட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் ஓசூரில் செய்தியாளர்களை மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் நேற்று சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் பேருந்து கட்டண உயர்வு சரியானதே. போக்குவரத்து துறை நலிவடைந்துள்ளது என்றார் அவர். பஸ் கட்டண உயர்வை திரும்ப பெற கோரி தமிழிசை கோரும் நிலையில் தமிழக அரசுக்கு பொன்னார் ஆதரவு தெரிவித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் கோவையில் செய்தியாளர்களை இன்று சந்தித்தார் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். அப்போது அவர் கூறுகையில், பேருந்து கட்டணத்தை குறைக்க வேண்டும். பேருந்து கட்டணத்தை சிறிது சிறிதாக உயர்த்தியிருக்கலாம் என்று அவரது கருத்தில் இருந்தே மாறுப்பட்ட ஒரு கருத்தை தெரிவித்தார். பேருந்து கட்டண விவகாரத்தில் பாஜகவில் கருத்து வேறுபாடு இல்லை என்றும் அவர் தெரிவித்தார். பேருந்து கட்டண விவகாரத்தில் இரு வேறு கருத்துகளால் சர்ச்சை எழுந்ததை அடுத்து பொன்.ராதாகிருஷ்ணன் தனது கருத்தை மாற்றிக் கொண்டதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications