தமிழகம் நிரந்தர ஆளுநர் இல்லாததைப் போலவே இல்லையாம்.. சொல்கிறார் பொன்.ராதாகிருஷ்ணன்
சென்னை: தமிழகத்தின் தற்போதைய ஆளுநர் தெளிவான முடிவுகளை எடுக்கிறார், நிரந்தர ஆளுநர் இல்லாததைப் போலவே இல்லை என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
பாஜக தலைமை அலுவலகமான சென்னை தியாகராயர் நகரில் உள்ள கமலாலயத்தில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: சென்னைத் துறைமுகம் - மதுரவாயல் இடையேயுள்ள பறக்கும் சாலை திட்டம் நிறுத்திவைக்கப்பட்டு சமீபத்தில்தான் மீண்டும் கட்டப்படும் என்ற அறிவிப்பு வந்திருந்தது.

இத்திட்டம் ரூ. 1815 செலவில் அமைக்கப்பட திட்டமிடப்பட்டிருந்தது. இதன் மூலம் 17 கி.மீட்டர் தூரத்தை 15 நிமிடங்களில் கடந்து செல்லும் வாய்ப்பு கிட்டும். இப்போது பறக்கும் சாலை மதுராந்தகம் வரை நீட்டிக்கப்படலாம் என்று தெரிய வந்துள்ளது.
சென்னை விமான நிலையம் - செங்கல்பட்டு பறக்கும் சாலை திட்டம், தாம்பரம்-செங்கல்பட்டு பறக்கும் சாலை திட்டம் ஆகிய இரண்டும் அறிவிக்கப்பட்டு சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் இதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை 45 இல் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க இத்திட்டங்கள் உதவும் என்று கருதப்படுகிறது என்று கூறினார்.
மேலும் தமிழக பள்ளி கல்வி அமைச்சர் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார். காலம் தாழ்ந்தவை என்றாலும் வரவேற்கிறேன். நீட்தேர்வில் தமிழக மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுக்காததற்கு ஆட்சியாளர்களே காரணம் என குற்றம்சாட்டிய அவர், தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் படிந்துள்ளதாக நடிகர் கமல்ஹாசன் கூறிய கருத்தை வரவேற்பதாகவும் கூறினார்.
தமிழகத்தின் தற்போதைய ஆளுநர் தெளிவான முடிவுகளை எடுக்கிறார், நிரந்தர ஆளுநர் இல்லாததைப் போலவே இல்லை என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications