நடிகர் சங்க பொறுப்பிலிருந்து விலகல்... பொன்வண்ணன் மறு பரிசீலனை செய்வார்- நாசர் நம்பிக்கை
நடிகர் சங்க பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்த பொன்வண்ணன் மறுபரிசீலனை செய்வார் என்று நாசர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சென்னை : நடிகர் சங்க பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்த பொன்வண்ணனின் முடிவை ஏற்க இயலாது, எனவே அவர் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று நடிகர் நாசர் கேட்டுக் கொண்டார்.
நடிகர் சங்க துணைத் தலைவர் பதவியை நடிகர் பொன்வண்ணன் ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், சொந்த காரணங்களுக்காக விலகியதாக விளக்கம் அளித்துள்ளார்.
எனினும் ஆர்.கே.நகர் இடைதேர்தலில் போட்டியிடுவதாக விஷால் அறிவித்ததற்காகதான் பொன்வண்ணன் ராஜினாமா செய்ததாக தகவல் பரவியது. இந்நிலையில் இவரது ராஜினாமா குறித்து நடிகர் சங்க நிர்வாகிகள் இன்று ஆலோசனை நடத்தினர்.
இதைத் தொடர்ந்து விஷாலும், நாசரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், பொன்வண்ணன் தனது நடிகர் சங்க துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தது குறித்து சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினோம். பொன்வண்ணனின் ராஜினாமாவை ஏற்றுக் கொள்ள முடியாது என்று அனைத்து நிர்வாகிகளும் கூறியுள்ளனர்.
இதை பொன்வண்ணனுக்கு தெரிவித்துவிட்டோம். இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்து அவரது நிலைப்பாட்டை தெரிவிப்பார். கார்த்தி ராஜினாமா செய்யபோவதாக கூறிய தகவல் பொய்.
நடிகர் சங்க சட்ட விதிகளின் படி தேர்தலில் நிற்கக் கூடாது என்று இல்லை. நான் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்ததற்கான காரணத்தை பொன் வண்ணனிடம் சொல்லிவிட்டேன். நடிகர் சங்க நிர்வாகிகள் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம்.
அவர் தனது முடிவை மறுபரிசீலனை செய்வோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.