பொங்கல் பண்டிகை கொண்டாட சொந்த ஊர் பயணம் - பேருந்து, ரயில்களில் அலைமோதிய கூட்டம்
பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படும் நிலையில், சென்னையில் வசிக்கும் ஆயிரக்கணக்கான வெளியூர் மக்கள், சிறப்பு பேருந்துகள் மூலமும், ரயில்கள் மூலமும் சொந்த ஊர் பயணப்பட்டனர்.
சென்னை: பொங்கள் பண்டிகை நகரங்களில் கொண்டாடுவதை கிராமங்களில்தான் சிறப்பாக கொண்டாடுவர்கள். எனவேதான் படிப்பு, பணி நிமித்தமாக சென்னையில் வசிப்பவர்கள் சொந்த பந்தங்களுடன் பண்டிகை கொண்டாட கிராமங்களுக்கு செல்வார்கள்.
பண்டிகைக்காக சொந்த ஊர் செல்லும் மக்களுக்காக சிறப்பு பேருந்துகள் 11ஆம் தேதி முதல் இயக்கப்பட்டன. 1லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் முன்பதிவு செய்திருப்பதாக போக்குவரத்துறையினர் தெரிவித்தனர்.
முன்பதிவு செய்தவர்கள் கோயம்பேடு பேருந்து நிலையம், சிறப்பு பேருந்து நிலையங்களுக்கு சென்று அங்கிருந்து சொந்த ஊர் சென்றனர். எனினும், முன்பதிவு செய்யாமல் இறுதி நிமிடத்தில் பயணம் மேற்கொண்ட பலருக்கு, பேருந்துகளில் இடம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

சிறப்பு பேருந்து நிலையங்கள்
தீபாவளி பண்டிகைக்கு செய்ததுபோல பூந்தமல்லி, தாம்பரம் அண்ணாநகர் ஆகிய பகுதிகளில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு, அங்கிருந்து தினமும் 1700க்கும் மேற்பட்ட பேருந்துகளை அரசு இயக்கி வருகிறது. பெரும்பாலானோர் நேற்று சொந்த ஊர்களுக்கு புறப்பட்டதால் கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் உள்ளிட்ட அனைத்து பேருந்து நிலையங்களிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

கூட்ட நெரிசல்
சிறப்பு பேருந்துகள் அதிகளவில் இயக்கப்பட்ட போதிலும், முன்பதிவு செய்யாமல், பயணம் செல்ல திட்டமிட்டிருந்தவர்களுக்கு பேருந்துகள் கிடைக்கவில்லை. மேலும், வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வந்து செல்லும் பேருந்துகளும் போக்குவரத்து நெரிசல் காரணமாக கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வருவதிலும் தாமதம் ஏற்பட்டதால், நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருந்ததாக பயணிகள் கவலையுடன் கூறினர்.

பயணிகள் கவலை
பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்லும் மக்களுக்காக, போதிய அளவு பேருந்துகள் இயக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் இருந்தாலும் சிறப்பு பேருந்துகள் திட்டமிட்டப்படி கோயம்பேட்டில் இயக்கப்பட்டதால், எந்த வித சிக்கலும் இன்றி சொந்த ஊர் செல்ல முடிவதாகவும் பயணிகள் பலர் தெரிவித்தனர்.

போக்குவரத்து நெரிசல்
இரவில் பயணம் செய்ய முடியாதவர்கள் இருசக்கர வாகனங்கள், வாடகைக் கார்கள் மூலமும் பலர் சொந்த ஊருக்கு சென்றனர். இதனால் தாம்பரம், பெருங்களத்தூர் பகுதிகளில் கூட்டம் அலைமோதியது. ஊருக்கு செல்ல எளிதான வழிகளை போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறினாலும் தென் மாவட்டங்களுக்கு செல்வோர் பலரும் தாம்பரம், பெருங்களத்தூர் வழியையே தேர்வு செய்ததால் நெரிசல் ஏற்பட்டது.

ரயில்களில் கூட்டம்
சென்னை சென்ட்ரல், எழும்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து தென் மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு இயக்கப்பட்ட ரயில்களில் பிற்பகல் முதலே கூட்டம் நிரம்பி வழிந்தது. மாலையில் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டன. இரவு ரயிலில் இடம் கிடைக்காதவர்கள் இன்று காலையிலும், பிற்பகல் ரயிலிலும் பயணம் செய்தனர்.

லட்சக்கணக்கானோர் பயணம்
சென்னையில் இருந்து கடந்த இரு நாட்களில் பொங்கல் சிறப்பு பேருந்துகளில் 2 லட்சத்து 50 ஆயிரம் பேர், ரயில்கள் மூலம் 1 லட்சம் பேர் என மொத்தம் 3 லட்சத்து 50 ஆயிரம் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications