பொங்கல் கொண்டாட ஊருக்கு போனவர்கள் திரும்ப வசதியாக, ஜன.19 வரை சிறப்பு பஸ்கள் இயக்கம்!
பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டவர்கள், மீண்டும் ஊர் திரும்ப வசதியாக, இன்றுமுதல் வரும் 19-ம் தேதி வரை 7,250 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதுமட்டுமின்றி சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு கிண்டி சிறுவர் பூங்கா, அண்ணா சதுக்கம், முட்டுக்காடு, மாமல்லபுரம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்கும் இன்றுமுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் தங்கள் சொந்த ஊரில் கொண்டாடுவதற்கு ஏதுவாக, சென்னை உட்பட தமிழகம் முழுவதும் கடந்த 5 நாட்களாக, 7,250 பேருந்துகள் இயக்கப்பட்டன. பொங்கலுக்கு முந்தைய நாளான நேற்று முன்தினம் மட்டும் சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து 1,457 சிறப்புப் பேருந்துகளும், மாநிலத்தின் இதர பகுதிகளிலிருந்து 800 சிறப்புப் பேருந்துகளும் என மொத்தம் 2,257 பேருந்துகள் இயக்கப்பட்டன.
பொங்கல் நாளான நேற்று அதிகாலை வரை பயணிகளின் வசதிக்கேற்ப சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடிய பின்னர், ஊர் திரும்பிட வசதியாக, இன்றுமுதல், 19ம் தேதி வரை 7,250 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இதனிடையே, சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், சென்னை மற்றும் புறநகர் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சுற்றுலா பொருட்காட்சி, அண்ணா சதுக்கம், காந்தி மண்டபம், வி.ஜி.பி., முட்டுக்காடு, கோவளம், எம்.ஜி.எம்., மாமல்லபுரம், வண்டலூர் உயிரியல் பூங்கா, கிஷ்கிந்தா, குயின்ஸ் லாண்டு போன்ற பல்வேறு சுற்றுலா மையங்களுக்கு இன்று முதல் 250 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நாளை மறுதினம் வரை இந்த சிறப்புப் பேருந்துகளை இயக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications