வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பு வழக்கு- பொன்முடி, மனைவி விசாலாட்சி விடுதலை
விழுப்புரம்: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் க. பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோரை விழுப்புரம் ஊழல் தடுப்பு நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
திமுக ஆட்சிக் காலத்தில் கல்வி அமைச்சராக இருந்தவர் பொன்முடி. தற்போதைய சட்டசபை தேர்தலில் திருக்கோவிலூர் தொகுதியில் பொன்முடி போட்டியிடுகிறார்
பொன்முடி மீது 2011-ம் ஆண்டு வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு முதலில் விழுப்புரம் மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்றது. பின்னர் 2012ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட ஊழல் தடுப்பு நீதிமன்றத்துக்கு இவ்வழக்கு மாற்றப்பட்டது.
இவ்வழக்கில் தமிழகம், ஆந்திராவைச் சேர்ந்த 39 பேர் சாட்சிகளாக விசாரிக்கப்பட்டனர். இன்று இந்த வழக்கில் இருந்து பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சியை விடுதலை செய்து ஊழல் தடுப்பு நீதிமன்ற நீதிபதி சுந்தரமூர்த்தி தீர்ப்பளித்தார்.
பின்னர் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பொன்முடி, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வழக்கு தொடரப்பட்டது; இன்று நீதிமன்றம் எங்களை விடுதலை செய்துள்ளது என்றார்.
தேர்தலில் போட்டியிட தடை நீங்கியது
இந்த தீர்ப்பை பொன்முடியும், திமுகவினர் பெரிதும் எதிர்பார்த்திருந்தனர். காரணம், இதில் பொன்முடிக்கு பாதகமாக தீர்ப்பு வந்திருந்தால் அவரால் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட முடியாமல் போயிருக்கும். திமுகவுக்கும் கெட்ட பெயர் ஏற்பட்டிருக்கும் என்பதால். ஆனால் தற்போது அவர் விடுதலையாகி விட்டதால் அவரும் தப்பினார், திமுகவும அவப் பெயரிலிருந்து தப்பி விட்டது. பொன்முடி போட்டியிடவும் தற்போது சிக்கல் ஏதும் இல்லை.