40 தொகுதிகளிலும் அதிமுகவை வெல்ல வைப்போம்.. புதிய பாரதம் ஜெகன் மூர்த்தி அழைப்பு
திருவள்ளூர்: 40 தொகுதிகளிலும் அதிமுகவை பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்போம் என்று புரட்சி பாரதம் கட்சித்தலைவர் பூவை. ஜெகன் மூர்த்தி அழைப்பு விடுத்துள்ளார்.
புரட்சி பாரதம் கட்சியின் நாடாளுமன்ற சூறாவளி பிரச்சாரம் நேற்று தொடங்கியது. கட்சித் தலைவர் பூவை எம்.ஜெகன்மூர்த்தி நேற்று மாலை 3 மணியளவில் திருவள்ளூர் அதிமுக வேட்பாளர் திரு. டாக்டர் பி.வேணுகோபாலை ஆதரித்து சூறாவளி பிரச்சார தேர்தல் சுற்று பயணத்தை திருமுல்லைவாயலில் தொடங்கினார்.
தொடர்ந்து ஆவடி, சேக்காடு, பட்டாபிராம், திருநின்றவூர், பெருமாள்பட்டு, தொழுவூர், காக்களூர், திருவள்ளூர், மணவாளநகர், அரண்வாயல், மேட்டுகண்டிகை, வெள்ளவேடு, திருமழிசை, நசரத்பேட்டை, பூவிருந்தவல்லி, கரையான்சாவடி, குமணன்சாவடி வழியாக காட்டுபாக்கத்தில் இரவு 9.50 மணியளவில் முடிவடைந்தது.
பிரச்சாரத்தில் வருவாய்த்துறை அமைச்சர் ரமணா, பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் மணிமாறன், ஜேசிடி பிரபாகர், திருவள்ளூர் ஒன்றிய சேர்மன் சந்திரசேகர் ,திருவள்ளூர் நகராட்சி தலைவர் கமாண்டோ பாஸ்கர் ,கடம்பத்தூர் ஒன்றிய சேர்மன் தட்சிணாமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
40 தொகுதிகளிலும் அமோக வெற்றி
பிரசாரத்தின்போது பூவை ஜெகன் மூர்த்தி பேசுகையில், வருகின்ற 24-4-2014 அன்று நடைபெற உள்ள பாராளுமன்ற மக்களவை பொதுத்தேர்தலில் அதிமுக 40 தொகுதிகளிலும் வெற்றிபெற அனைவரும் பாடுபட வேண்டும்.
பொருளாதாரம் சீர்குலைந்தது
கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் காங்கிரஸ் கூட்டணி அரசும், தோழமை கட்சியான தி.மு.க. வாலும் நம் இந்திய திருநாட்டின் பொருளாதாரம் முற்றிலுமாக சீர்குலைத்துவிட்டது.
விலைவாசி உயர்ந்து விட்டது
விலைவாசி உயர்வு, பெட்ரோல் விலை உயர்வு மற்றும் 2G ஸ்பெக்ட்ரம் ஊழல் என ஏராளம் கூறிக்கொண்டே போகலாம்.
வாழ்வு செழிக்க.. மீனவர் உயிர் காக்க
மக்களின் வாழ்வு செழிக்கவும், விலைவாசி கட்டுக்குள் அடங்கவும், மீனவர்களின் உயிர் பாதுகாக்கப்படவும்,கட்ச தீவு மீட்க படுவதற்கும் , மாணவர்களின் எதிர்கால வாழ்க்கை உயரவும்,இலங்கை தமிழரின் மறுவாழ்விட்கும் மக்கள் அனைவரும் அதிமுக வேட்பாளர் வேணுகோபால் அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும்.
பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில்
அதிமுக வேட்பாளர்கள் 40 மக்களவைத் தொகுதிகளிலும் பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற அதிமுக வை ஆதரிப்போம் என்றார்.