சென்னை குண்டுவெடிப்பு: முதல்கட்ட மீட்புப் பணியில் ஈடுபட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள்...
சென்னை: குண்டு வெடித்த இடத்தில் முதல்கட்ட மீட்புப் பணியில் அங்கிருந்த சுமை தூக்கும் தொழிலாளார்கள் ஈடுபட்டதாகத் தெரிய வந்துள்ளது.
இன்று காலை சுமார் 7.25 மணியளவில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டுவெடித்தது. சென்னை வந்த கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலின் எஸ்-4, எஸ்-5 பெட்டிகளில் அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்ததில், அதில் பயணம் செய்த 22 வயதுடைய சுவாதி என்ற பெண் உயிரிழந்துள்ளார்.
மேலும் படுகாயமடைந்த 14 பேர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர். படுகாயமடைந்தவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் குண்டு வெடிப்பு சம்பவத்தை நேரில் பார்த்த அங்கிருந்த சுமை தூக்கும் தொழிலாளர்கள் கூறியதாவது :-
9ம் பிளாட்பார்மில் கவுகாத்தி ரயில் வந்து நின்றது. நாங்கள் 5ம் பிளாட்பார்மில் இருந்து அங்கு விரைந்து வந்தோம். அப்போது ரயிலில் இருந்து பயங்கரச் சத்தம் கேட்டது. சம்பவ இடம் முழுவதும் புகையால் சூழ்ந்தது. பயணிகளின் அலறல் சத்தம் கேட்டது. சத்தம் கேட்டு போலீசார் அங்கு வருவதற்குள்ளாக நாங்கள் ரயிலுக்குள் விரைந்தோம். அங்கு காயமடைந்தவர்களை மீட்டு அருகில் இருந்த ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம்' என இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications