நீதிமன்ற உத்தரவுப்படி தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்த 6 பேரின் பிரேத பரிசோதனை தொடங்கியது
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியானோரின் 13 பேரில் மீதம் உள்ள 6 உடல்கள் இன்று பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது.
சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியான 6 பேரின் உடலை பிரேத பரிசோதனை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. அதன்படி, இன்று காலை நீதிமன்ற வழிகாட்டுதலின் படி பிரேத பரிசோதனை தொடங்கியது.
கடந்த 22ம் தேதி தூத்துகுடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது, போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர். இதனையடுத்து பலியானவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்யப்படுவதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

அந்த வழக்கில், பிரேத பரிசோதனை செய்யும்போது, பொதுமக்கள் தரப்பில் ஒரு மருத்துவரை நியமிக்க வேண்டும். துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து மாவட்ட முதன்மை நீதிபதியை கொண்டு விசாரணை நடத்தி அறிக்கை பெறவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், அரசு மருத்துவர்கள் 2 பேர், ஜிப்மர் அல்லது எய்ம்ஸ் அல்லது திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றும் மருத்துவர் ஒருவர் என 3 டாக்டர்களை கொண்டு ஒரு குழுவை அமைக்கவேண்டும்.
பிரேத பரிசோதனையின்போது, ஸ்கேன், எக்ஸ்ரே, புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கவேண்டும். அதன்பின்னர் பிரேத பரிசோதனை செய்யவேண்டும் என்று விரிவான உத்தரவை நீதிபதிகள் பிறப்பித்தனர்.
இதை எதிர்த்து இறந்தவர்களில் 6 பேரின் உறவினர்கள் மேல்முறையீடு செய்யப்போவதாக சொல்லி இருந்ததால், மீதம் இருந்த 7 பேரின் உடல்களை மட்டும் பிரேத பரிசோதனை செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர். அதன்படி, அந்த உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடையே ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இனியும் பிரேத பரிசோதனை நடத்தாமல் இருந்தால் ஆதாரங்கள் அழிந்துபோகும் வாய்ப்பு உள்ளது. எனவே, உடனடியாக பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டனர்.
இதனையடுத்து இன்று காலை மீதம் உள்ள 6 உடல்களுக்கான பிரேத பரிசோதனை தொடங்கியது. நீதிமன்ற உத்தரவுப்படி, வீடியோ ஒளிப்பதிவுடன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications