ரூ.2000 கடனுக்காக 5 வயது சிறுமியை பலாத்காரம் செய்த கோழிப்பண்ணை அதிபர் கைது!
வேலூர்: தாய் வாங்கிய 2 ஆயிரம் ரூபாய் கடனுக்காக அவரது 5 வயது மகளை கடத்தி பலாத்காரம் செய்த வேலூர் கோழிப்பண்ணை அதிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
வேலூர், பழைய நகரைச் சேர்ந்தவர் கோழிப் பண்ணை அதிபர் முபாரக். இவரிடம் வேலூர், தேவராஜ நகரைச் சேர்ந்த ஒரு பெண் ரூ.2 ஆயிரம் கடன் வாங்கியிருக்கிறார். அந்த கடனை அந்த பெண்ணால் திருப்பி செலுத்த முடியவில்லை.
இதனால் முபாரக் அந்த பெண்ணை ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், பலம்நேருவில் உள்ள தனது கோழிப்பண்ணையில் வேலை செய்து கடனை அடைக்கும்படி வற்புறுத்தி அழைத்துச் சென்றிருக்கிறார்.
அந்த பெண்ணும், தனது 5 வயது மகளுடன் அந்த கோழிப்பண்ணையில் சில நாள் வேலை செய்திருக்கிறார். ஆனால், 'சரியாக வேலை செய்யவில்லை' எனக்கூறி அந்த பெண்ணை முபாரக் வேலையில் இருந்து நீக்கி விட்டார். 'மகளை மட்டும் வேலைக்கு வைத்துக் கொண்டு கடனை செலுத்தி விட்டு மகளை அழைத்து செல்' எனக் கூறியிருக்கிறார்.
வேலூர் திரும்பிய அந்த பெண் பணத்தை திரட்டிக்கொண்டு, கடனை அடைத்து மகளை மீட்க பலம்நேரி கோழிப் பண்ணைக்கு சென்று, மகளை பார்த்த போது அவரை அதிர்ச்சி அடையச் செய்தது. மகள் உடம்பில் சூடு போடப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டிருந்தாள். அதோடு தன்னை முபாரக் கற்பழித்ததாகவும் சிறுமி கூறினாள்.
இதையடுத்து, தாய் வலம்நேரு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் முபாரக்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார்.