படிப்படியாக குறையும் தென்மேற்கு பருவகாற்று - மீண்டும் வருமா மின்தடை?
நெல்லை: இரண்டு மாத காலங்களாக நன்றாக வீசி வந்த தென்மேற்கு பருவகாற்று மூலம் 2500 மெகா வாட் மின்சாரம் கிடைத்து வந்த நிலையில் தற்போது அவை குறைய தொடங்கி வி்ட்டதால் மீண்டும் மின் வெட்டு தலை தூக்கும் அபாயம் எழுந்துள்ளதாக - மின் வாரியத்தினரே புலம்ப ஆரம்பித்து விட்டனர்.
தமிழகத்தின் மின் தேவையை பூர்த்தி செய்வதில் காற்றாலை மின்சாரம் முக்கிய பங்கு வகித்து வருகிறது. குறிப்பாக காற்று சீசன்காலங்களில் நெல்லை மண்டலத்தில் 10 ஆயிரம் காற்றாலைகள் மூலம் தினமும் 3 முதல் 4,000 மெகா வாட் வரை மின்சாரம் கிடைக்கிறது.
இருப்பினும் இதன் மூலம் உற்பத்தியாகும் மின்சாரத்தின் பிற பகுதிகளுக்கு கொண்டு செல்ல முறையான மின் பாதை இல்லை.
முடக்கி வைக்கப்படும் மின்சாரம்
சில நேரங்களில் குறிப்பிட்ட அளவுக்கு மட்டுமே மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால் காற்றாலை நன்கு இயங்கினாலும் சில நேரங்களில் அவை முடக்கி வைக்கப்படுகிறது.
கை கொடுத்த காற்றாலைகள்
தமிழகத்தில் பல ஆண்டுகளாக மி்ன்தட்டுபாடு நிடித்து வந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக மின்தடை நீக்குவதற்கு காற்றாலை மின்சாரம் கை கொடுத்தது.
நாள்தோறும் 2500 மெகாவாட்
இதனால் நாள்தோறும் 2500மெகா வாட் மின்சாரம் கிடைத்து வந்தது. இந்நிலையில் அதிகாலை வெறும் 255 மெகா வாட்டாக காற்றாலை மின் உற்பத்தி சரிந்து விட்டது.
திகைப்பில் மின்வாரியம்
கடும் வெயில் அடிக்கும் கோடை காலங்களில் மட்டுமே இந்த இரட்டை இலக்க சரிவை காற்றாலை மின் உற்பத்தி சந்திக்கும். இதனால் மி்ன் வாரியத்தினர் திகைத்து போய் உள்ளனர்.
சீசன் முடிந்தது... காற்றும் நின்றது
தற்போது குற்றால சீசன் நிறைவடைந்து விட்டதால் இனிமேல் காற்று எதிர்பார்த்த அளவு கிடைக்க வாய்ப்பில்லை. அதிகாலை நேரங்களில் மட்டும் ஓரளவுக்கு காற்று வீசும்.
மீண்டும் வருமா ஷாக்...!
இதனால் நெல்லை மாவட்டத்தில் மீண்டும் மின்தடை தலைதூக்க வாய்ப்புள்ளதாக மின் வாரியத்தினர் தரப்பில் கூறப்படுகிறது.