தமிழகத்தில் மீண்டும் தலையெடுக்கும் மின்வெட்டு..மக்கள் படும்பாட்டை உணருமா அரசு?
தமிழகத்தின் பல பகுதிகளில் மீண்டும் மின்வெட்டு தலையெடுக்க தொடங்கியுள்ளதால் மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.
சென்னை: தமிழகத்தின் பல பகுதிகளில் மீண்டும் மின்வெட்டு தலையெடுக்க தொடங்கியுள்ளதால் மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். அடிக்கடி ஏற்படும் மின்வெட்டால் சிறுகுறு தொழில் நிறுவனங்கள் முடங்கும் ஆபத்து ஏற்ட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் மக்கள் பெரும் அவதியடைந்துள்ளனர்.
தமிழகத்தில் அடித்து வெளுக்கும் வெயிலால் மக்கள் வீடுகளை விட்டே வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டால் மக்கள் வீடுகளுக்குள்ளேயும் இருக்க முடியவில்லை.
ஆறுதல் அளிக்கும் ஃபேன்
தமிழகம் முழுவதும் தகிக்கும் வெப்பம் காரணமாக மக்கள் ஃபேன், ஏசி போன்றவை இல்லாமல் வீட்டில் இருக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. சுட்டெரிக்கும் வெயில் மற்றும் புழுக்கத்தில் இருந்து பெரும்பாலான மக்களுக்கு ஃபேன் காற்றுதான் சற்று ஆறுதல் அளித்து வருகிறது.
சட்னி கூட வைக்க முடியவில்லை
இந்நிலையில் தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக இரவு பகல் என மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இரவு நேரங்களில் தூங்க முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
எந்த அறிவிப்பும் இன்றி 2 மணி நேரம் 3 மணி நேரம் நிறுத்தப்படும் மின்சாரத்தால் சட்னி கூட அரைக்க முடியாமல் நகர்புற இல்லத்தரசிகள் திணறி வருகின்றனர்.
அனைத்து பணிகளும் முடங்குகிறது
மின்வெட்டால் மோட்டார்களை இயக்கமுடியாததால் மக்கள் தண்ணீருக்காகவும் அலைந்து திரிந்து வருகின்றனர். அத்தியாவசிய தேவையான மின்சாரத்தை நம்பியே பெரும்பாலான பணிகள் உள்ளதால் தலை விரித்தாடும் மின்வெட்டால் அனைத்து பணிகளும் முடங்குகின்றன.
உற்பத்தி பாதிப்பு
நாகை, கடலூர், திருவாரூர், திண்டுக்கல், ஈரோடு, கோவை என பெரும்பாலான மாவட்டங்களில் ஒரு நாளில் முக்கால்வாசி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. இதனால் சிறு குறு தொழில் புரிவோர் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
டீசல் வாங்கி கட்டுப்படியாகாத நிலையில் இந்த திடீர் மின்வெட்டால் தொழில் முடங்கும் ஆபத்து உருவாகியுள்ளதாக தொழில் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. மேலும் உற்பத்தி பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக விசைத்தறியாளர்கள் மற்றும் பின்னலாடை நிறுவன தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இருளில் மூழ்கிய வட சென்னை
வடசென்னை பகுதிகளான வியாசா்பாடி, பெரம்பூா், ஆா்.கே.நகா், ராயபுரம், தண்டையார்பேட்டை, காசிமேடு, வண்ணாரப்பேட்டை, ஐ.ஓ.சி உள்ளிட்ட பல பகுதிகள் இரவு 8 மணி முதல் இருளில் மூழ்கின. இதனால் மக்கள் உறங்க முடியாமல் தவித்தனா். பல இடங்களில் மக்கள் மின்அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அனல் மின்நிலையங்கள் பழுது
அனல்மின் நிலையங்களில் பழுது ஏற்பட்டுள்ளதால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. வட சென்னை அனல் மின் நிலையத்தில் மட்டும் மொத்த மின் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 1830 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 2ம் அலகில் 1200 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டிருந்தது. தற்போது முதல் அலகில் 630 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது
மக்கள் கஷ்டத்தை உணருமா?
தலைவிரித்தாடும் மின்வெட்டால் மக்கள் படும் பாட்டை உணர்ந்து அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே செயலற்ற அரசு என எதிர்க்கட்சிகள் சாடி வரும் நிலையில் அரசைக் கண்டித்தும் அரசுக்கு எதிராகவும் போராட்டங்கள் வெடிக்கும் என்பதில் சந்தேகமில்லை.