கோவையில் 4 மணி நேரமாக குறைந்து விட்டதாமே மின்வெட்டு...!
கோவை: கோவையில் பல மணி நேர மின் வெட்டு தற்போது 4 மணி நேரமாக குறைந்துள்ளதாக டான்ஜெட்கோ கூறுகிறது.
கடந்த சில வாரங்களாக குறைந்தது 9 மணி நேரம் வரை அங்கு மின்வெட்டு அமலாகி வந்தது. இதனால் தொழில்கள் பாதிக்கப்பட்டன. கோவை என்று மட்டும் இல்லாமல் திருப்பூர், ஈரோடு என தொழில் மாவட்டங்கள் பல மணி நேர மின்வெட்டை சந்தித்து பெரும் துயரத்தில் மூழ்கியுள்ளன
ஆனால் தற்போது இது நான்கு மணி நேரமாக குறைந்திருப்பதாக டான்ஜெட்கோ கூறுகிறது. இதுகுறித்து டான்ஜெட்கோ அதிகாரி ஒருவர் கூறுகையில், தற்போது அனல் மின்சார உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால் மின்வெட்டு நேரம் 4 மணி நேரமாக குறைந்திருக்கிறது. அனல் மின்சாரம் கூடுதலாகும் என்று எதிர்பார்க்கப்படுவதால், கோவை மாவட்டத்தில், மின்வெட்டு நேரம் மேலும் குறையும் வாய்ப்புள்ளது.
தற்போது காற்றாலை மின்சாரம் சுத்தமாக இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு வரை தினசரி 500 மெகாவாட் மின்சாரம் வரை காற்றாலைகள் மூலம் கிடைத்து வந்தது. தற்போது அது குறைந்து விட்டது என்றார்.
கோவை பிராந்தியத்திற்குட்பட்ட கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களின் தினசரி மின் தேவை, 3.1 கோடி யூனிட்டாகும். ஆனால் இந்தத் தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு மின் உற்பத்தி இல்லை என்பதால் விநியோகத்தில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதாம்.
இருப்பினும் தற்போது கிட்டத்தட்ட 2 கோடி யூனிட் வரை மின்சாரம் கிடைத்து வருவதால் கடந்த சில நாட்களாக, அதாவது மூன்று நாட்களாக மின்வெட்டு நேரம் மூன்றரை மணி நேரம் முதல் 4 மணி நேரமாக குறைந்துள்ளதாம். கோவை நகரின் பல பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மின்தடை இல்லை என்றும் தகவல்கள் கூறுகின்றன.












Click it and Unblock the Notifications