கரண்ட் இல்லாவிட்டாலும் அதிமுகவுக்கு ஓட்டு போடுங்க.. இது நாட்டாமை சரத்குமார் தீர்ப்பு
சென்னை: தமிழகத்தில் நிலவும் மின்வெட்டுப் பிரச்சினை அதிமுக வெற்றியை பாதிக்காது எனத் தெரிவித்துள்ளார் சமத்துவ மக்கள் கட்சி தலைவரும், நடிகருமான சரத்குமார்.
லோக்சபா தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடவில்லை. ஆனபோதும், அக்கட்சி தலைவர் சரத்குமார் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் ‘தி இந்து' நாளிதழுக்கு சரத்துகுமார் பிரத்யேகப் பேட்டி அளித்துள்ளார். அதில், தமிழகத்தில் நிலவும் மின்வெட்டு அதிமுகவின் வெற்றி வாய்ப்பை பாதிக்காது என உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
மேலும், இது தொடர்பாக அவர் அப்பேட்டியில் கூறியிருப்பதாவது :-
பதவி சுகத்தை அனுபவித்த திமுக...
ஊழல்கள் நிறைந்த காங்கிரஸ் ஆட்சியும் அதில் 9 ஆண்டுகள் பங்கெடுத்த திமுகவும் பதவி சுகத்தை மட்டுமே அனுபவித்ததே தவிர தமிழகத்துக்கு எதுவும் செய்யவில்லை. காங்கிரஸ், திமுக தேர்தலில் வெற்றி பெற வாய்ப்பில்லை.
பாஜக கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி...
பாஜக கூட்டணி சந்தர்ப்ப வாத கூட்டணி. அது வலுவான கூட்டணி அல்ல. கம்யூனிஸ்ட்டுகள் தனித்துப் போட்டியிடுகிறார்கள். அவர்கள் பற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை. மாநிலக் கட்சி வெற்றி பெற்றால்தான், மத்திய ஆட்சியில் அங்கம் வகித்தால்தானே மாநில தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும்.
அதிமுகவிற்காக பிரச்சாரம்....
காவிரி பிரச்சினை, முல்லை பெரியாறு, தமிழக மீனவர் பிரச்சினை உள்ளிட்டவற்றை தீர்க்க மத்தியில் அங்கம் வகித்தால்தான் மாநிலத்துக்கான திட்டங்களை செயல்படுத்த முடியும். அதற்காக அதிமுகவுக்கு வாக்களிக்கக் கோரி பிரச்சாரம் செய்கிறேன்.
மின்வெட்டுக்கு திமுக தான் காரணம்...
திமுக ஆட்சியில் தொலை நோக்கு திட்டங்கள் செயல்படுத்தப்படாததுதான், தற்போதைய மின் வெட்டுக்கு காரணம். அதனை சரி செய்து, மின் மிகை மாநிலமாக தமிழகத்தை மாற்ற முதல்வர் நட வடிக்கை மேற்கொண்டு வருகிறார். மின்வெட்டு வெற்றியைப் பாதிக் காது.
கூட்டணி தர்மத்தின்படி பிரச்சாரம்....
லோக்சபா தேர்தலில் போட்டியிட எங்கள் கட்சிக்கு வாய்ப்பு கிட்டாததால் வருத்தப்படவில்லை. கூட்டணி தர்மத்தின்படி, அதிமுகவுக் காக பிரச்சாரம் செய்கிறேன்' என இவ்வாறு அவர் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.