பவர் சோப் நிறுவன உரிமையாளர் வீடு, அலுவலகங்களில் ஐடி ரெய்டு... 50 இடங்களில் அதிகாரிகள் சோதனை

திண்டுக்கல் அடுத்த கொடைரோட்டில் வசித்து வருபவர் தனபால். இவருக்கு சொந்தமான பவர் சோப்பு கம்பெனி அம்மைய நாயக்கனூரில் உள்ளது.
கொடைரோட்டில் உள்ள தனபாலுக்கு சொந்தமான பங்களா வீடு மற்றும் கம்பெனி, அலுவலகம் ஆகிய இடங்களில் 50க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இன்று காலை 8 மணிக்கு வந்த அதிகாரிகள் பங்களா வீட்டில் உள்ள முன்பக்க கதவை இழுத்து பூட்டிவிட்டு சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது வீட்டில் உள்ளவர்களிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அதிகாரிகள் ஏராளமான ஆவணங்களை சரிபார்த்தனர். முன்னதாக வீட்டிற்குள் உள்ளவர்கள் வெளியே செல்லாதவாறும், வெளிநபர்கள் யாரும் உள்ள வரக்கூடாது என அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
அம்மையநாயக்கனூரில் உள்ள அலுவலகம் மற்றும் தொழிற்சாலையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தெரிகிறது. தொடர்ந்து அதிகாரிகள் அங்கு அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
இதேபோல பவர் சோப்புக்கு சொந்தமான மதுரை, காரைக்கால், சென்னை, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இடங்களில் இன்று காலை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் கூறுகையில், இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகிறோம். முழுமையாக சோதனை நடத்திய பிறகே முக்கிய ஆவணங்கள் சிக்கியதா? என்று கூறுவோம் என்றனர்.
பவர் சோப்பு கம்பெனி மற்றும் பங்களா வீட்டில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications