வெள்ளநிவாரணம், அம்மா மருந்து... அதிமுக அரசு மீது பிரகாஷ் ஜவடேகர் பரபரப்பு குற்றச்சாட்டு
சென்னை: வெள்ள நிவாரண நிதியாக மத்திய அரசு வழங்கிய ரூ. 2 ஆயிரம் கோடி பணத்தையே, தமிழக அரசு பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 5 ஆயிரம் என பிரித்து வழங்கியுள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், கூட்டணி குறித்து மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த சென்னை வந்துள்ளார் மத்திய அமைச்சரும், தமிழக தேர்தல் பொறுப்பாளருமான பிரகாஷ் ஜவடேகர்.
நேற்று சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்ட சில கட்சித் தலைவர்களை அவர் சந்தித்தார். இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவர் சந்திக்க உள்ளார். இந்நிலையில், தனது கட்சித் தலைவர்களைச் சந்தித்து இன்று அவர் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார்.
அப்போது செய்தியாளர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:-

வெள்ள நிவாரணம்...
தமிழகத்திற்கு வெள்ள நிவாரணமாக மத்திய அரசு ரூ. 2 ஆயிரம் நிதி வழங்கியது. அந்தப் பணத்தில் இருந்தே தமிழக அரசு பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா ரூ. 5 ஆயிரம் நிவாரண நிதி வழங்கியது.

அம்மா மருந்து...
இதேபோல், மத்திய அரசு 30 வகை மருந்துகளை தமிழகத்திற்கு வழங்கியது. அதனை ‘அம்மா மருந்து' என தமிழக அரசு வழங்கியது. உண்மைகளை பாஜக விரைவில் வெளிக்கொணரும்' என்றார்.

விமர்சனம்...
இந்தப் பேட்டியின் போது ஜெயலலிதா மற்றும் கருணாநிதி இருவரையும் காரசாரமாக விமர்சித்தார் ஜவடேகர். விவசாயிகளுக்கான மோடியின் புதிய பயிர் காப்பீட்டுத் திட்டம் குறித்தும் அவர் பாராட்டிப் பேசினார்.

பாதியில் முடிந்தது...
பேட்டி நடந்து கொண்டிருந்த போது, பத்திரிகையாளர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தனது பேட்டியைப் பாதியில் முடித்துக் கொண்டு கிளம்பினார் ஜவடேகர்.












Click it and Unblock the Notifications