எல்.இ.டி. 'பல்பு' பஞ்சாயத்தை விடாமல் தூக்கிபிடிக்கும் பிரகாஷ் ஜவடேகர்....
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க முடியவில்லை; 'உஜாலா' எல்.இ.டி. பல்பு திட்டத்தை தமிழகம் ஏற்கவில்லை என்ற குற்றச்சாட்டுகளை தமிழகம் வரும்போதெல்லாம் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரும் கையிலெடுத்துக் கொண்டு விமர்சிப்பதையே வாடிக்கையாக கொண்டுள்ளார்.
சட்டசபை தேர்தல் குறித்து தமிழக பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த மத்திய அமைச்சரும் பா.ஜ.க-வின் தமிழக தேர்தல் பொறுப்பாளரான பிரகாஷ் ஜவடேகர் நள்ளிரவு சென்னை வந்தார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழகத்தில் பா.ஜ.க. தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐ.ஜே.கே., புதிய நீதிக்கட்சி ஆகிய கட்சிகள் உள்ளன. மேலும் சில கட்சிகள் சேர உள்ளன.
மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், தமிழக முதல்வரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டது எனக் கூறியிருப்பது அரசியல் ஆதாயத்திற்காக என்பது சரியல்ல. ஒரு முதல்வர் குறித்து அரசியல் ஆதாயத்திற்காக சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
பியூஷ் கோயலுக்கு தமிழகத்தில் கிடைத்த அனுபவம் குறித்து அவர் சொல்லி இருக்கிறார். இது தவறில்லை. அது உண்மை.
மத்திய அரசு ‘உதய்' உஜாலா திட்டங்களைக் கொண்டுவந்துள்ளது. இதை தமிழக அரசு எதிர்ப்பது சரியானது அல்லது. இது ஒரு நல்ல திட்டம். இத்திட்டம் கோடிக்கணக்கான மக்கள் பயன் பெரும் திட்டம் ஆகும்.
தமிழகத்தில் மின்துறையால் ஏற்பட்ட இழப்பை மத்திய அரசின் இந்த உதய் திட்டம் மூலம் தடுத்திருக்க முடியும்.
உஜாலா திட்டம்....
‘உஜாலா' திட்டத்தின் மூலம் எல்.இ.டி. விளக்குகள் வெளிமார்க்கெட்டில் ரூ.400-க்கு விற்கப்பட்டது. இப்போது ரூ.200 ஆக குறைந்துள்ளது. அதிலும் மாநில அரசுக்கு ரூ.100 விலைக்கு மத்திய அரசு வழங்குகிறது. அப்படியிருந்தும் தமிழக அரசு அந்த திட்டத்துக்கு ஒத்துழைக்கவில்லை. அதற்கு மாறாக அரசை விட கூடுதல் விலைக்கு விற்பவர்களுக்கு சாதகமாக செயல்படுகிறது. மக்களுக்கு பயனளிக்கும் மத்திய அரசின் திட்டங்கள் மீது தமிழக அரசுக்கு விருப்பமில்லை.
மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க 6 மாநிலங்களில் இருந்து கருத்து கேட்கப்பட்டது. இதற்கு 5 மாநிலங்கள் தங்களுடைய கருத்துகளை தெரிவித்த நிலையில், தமிழகம் மட்டும் அறிக்கையை சமர்பிக்கவில்லை.
இவ்வாறு பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.
பின்னர் இன்று சென்னையில் பாஜக நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். இதில் கட்சியின் தேசிய செயலாளர் முரளிதரராவ், மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மோகன் ராஜூலு, இல.கணேசன், வானதி சீனிவாசன், நரேந்திரன், கே.டி. ராகவன், கருப்பு முருகனாந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications