சிபிஐ கேட்டால் ஜெ. சிகிச்சை விவரம் அனைத்தையும் கொடுக்க ரெடி: பிரதாப் ரெட்டி
ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தினால் விளக்கம் அளிக்க தயார் என பிரதாப் ரெட்டி இன்று தெரிவித்துள்ளார்.
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்தினால் அனைத்து விவரங்களையும் அளிக்க தயார் என்று அப்பல்லோ மருத்துவமனை குழு தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சுமார் 75 நாட்கள் சென்னை, அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த டிசம்பர் 5ம் தேதி இரவு 11.30 மணிக்கு மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
ஆனால், ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளது என்றும் அதுகுறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகள் தீவிரமாகியுள்ளது.
இந்நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தினால் விளக்கம் அளிக்க தயார் என பிரதாப் ரெட்டி இன்று தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களின் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்து இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். அதேநேரம், ஏற்கனவே, ஜெயலலிதா மரணம் தொடர்பாக அனைத்து விளக்கங்களும் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அளிக்கப்பட்டு விட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதிமகு பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பேற்பு உள்ளிட்ட அரசியல் நகர்வுகளுக்கு பிறகு, ஜெயலலிதா இறப்பிலுள்ள மர்மம் குறித்த கேள்வி அதிகமாக எழவில்லை. இந்த நிலையில், பிரதாப் ரெட்டி இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.