கோழி பிரியாணி, குவார்ட்டர் கொடுத்து கூட்டம் சேர்க்கிறார் ஜெ... 'கேப்டன்' மனைவி பேச்சு!
சென்னை: ஜெயலலிதாவின் கூட்டத்திற்கு குவார்ட்டரும், கோழி பிரியாணியும் கொடுத்து கூட்டத்தை சேர்ப்பது மட்டுமல்லாமல் 5 மணி நேரம் அவர்களை வெயிலில் காயவைக்கிறார்கள். இதில் போலீசார் உட்பட பல பேர் மயங்கி விழுந்திருக்கிறார்கள். இது வெளியில் தெரிய வில்லை என்று பேசியுள்ளார் பிரேமலதா விஜயகாந்த்.
விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதாவும் பிரசாரத்தில் குதித்திருக்கிறார். திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி தேமுதிக வேட்பாளர் யுவராஜை ஆதரித்து பெரியபாளயைத்தில் நேற்று பிரசாரம் தொடங்கினார் பிரேமலதா.
அவரது பேச்சில் வழக்கம் போல டாஸ்மாக் கடைகளை விமர்சித்தல், ஜெயலலிதாவை விமர்சித்தல் என்று அனல் பறந்தது.
பிரேமலதா பேச்சிலிருந்து...

பெரியபாளையம் அம்மன் திருவருளால்...
பெரியபாளையத்தில் என்னுடைய முதல் பிரசாரத்தை தொடங்குகிறேன். பெரியபாளையம் அம்மன் மற்றும் சிறுவாபுரி முருகன் அருளால் நாங்கள் வெற்றி பெறுவோம். அதிமுகவுக்கு சவுக்கடி கொடுக்கும் கூட்டணி இது.

கூட்டம் வரும்.. ஆனால் வசதி இல்லை
பெரியபாளையத்தில் சனி, ஞாயிறுகளில் பக்தர்கள் அதிக அளவுக்கு வருவார்கள். ஆனால் இங்கு எந்தவித அடிப்படை வசதியும் பக்தர்களுக்கு செய்து தரப்படவில்லை.

சொன்னதைச் செய்தார்களா... செய்தார்களா...
பழவேற்காடு சுற்றுலாதளமாக மாற்றப்படும் என வாக்குறுதி கொடுத்தார்கள். இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

ஏரியைத் தூர் வாறலையே...
புழல் ஏரி இதுவரை தூர் வாரப்படவில்லை. திமுக, அதிமுகவினர் பிரதமர் வேட்பாளர் யார் என்று சொல்லி ஓட்டு கேட்க முடியவில்லை. ஜெயலலிதா பிரதமராக வரமுடியாது என தெரிந்து, தற்போது மத்தியில் அங்கம் வகித்தால் போதும் என்கிறார்.

முதல்ல எம்.பி தேர்தலில் போட்டியிட வேண்டியதுதானே...
ஜெயலலிதா பிரதமராக வரவேண்டும் என்றால் முதலில் எம்பியாக தேர்தலில் போட்டியிட வேண்டும். மோடி போல நாடாளுமன்ற வேட்பாளராக ஜெயலலிதா போட்டியிடுவாரா? தமிழ் நாட்டில் 40 எம்பி தொகுதிகளில் வெற்றி பெற்று எப்படி பிரதமராக முடியும்?

இதுதாங்க ஜெயலலிதா ஆட்சியின் சாதனை
இரண்டு மணிநேரமே இருந்த மின்வெட்டு தற்போது 10 மணிநேரம், 12 மணி நேரமாக மாறிவிட்டது. இது தான் ஜெயலலிதா ஆட்சியின் சாதனை.

எல்லோரையும் குடிகாரர்களாக்கி விட்டார்...
ஜெயலலிதா ஆட்சியின் சாதனைகள் எல்லாம் டாஸ்மாக் மதுபானக்கடைகளை திறந்து மக்களை குடிகாரர்களாக ஆக்கியதுதான். இதனால் பல குடும்பங்கள் பாதித்துள்ளது.

எப்படி 3வது அணியை அமைக்க முடியும்
கடைசி நிமிடம் வரை கம்யூனிஸ்டுகளை ஏமாற்றிய ஜெயலலிதா எப்படி மூன்றாவது அணியை அமைக்க முடியும்? மீனவர்களின் பிரச்னைக்கு ஜெயலலிதா இதுவரை பிரதமரை சந்தித்ததுண்டா?

கோழி பிரியாணியும், குவார்ட்டரும்...
ஜெயலலிதாவின் கூட்டத்திற்கு குவார்ட்டரும், கோழி பிரியாணியும் கொடுத்து கூட்டத்தை சேர்ப்பது மட்டுமல்லாமல் 5 மணி நேரம் அவர்களை வெயிலில் காயவைக்கிறார்கள். இதில் போலீசார் உட்பட பல பேர் மயங்கி விழுந்திருக்கிறார்கள். இது வெளியில் தெரிய வில்லை.

மூலை முடுக்கெல்லாம் டாஸ்மாக் கடை
முடுக்கெல்லாம் டாஸ்மாக் மதுபானக் கடையைத் திறந்ததுதான் அதிமுக ஆட்சியின் சாதனை. தண்ணீரை பாட்டிலில் அடைத்து 10 ரூபாய்க்கு விற்கும் ஒரே ஆட்சி அதிமுக ஆட்சி தான் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications